காரைதீவு பிரதேச கரையோர வளங்களைப் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல்…

(சுமன்)

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட கரையோரப் பிரதேசங்களைப் பாதுகாக்கும் முகமாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் காரைதீவு பிரதேசசபை மண்டபத்தில் பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி, கடல் சார் திணைக்கள அதிகாரி,  சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலக கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர், பிரதேசசபைச் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், விடயத்திற்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், வேலை மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கரையோரச் சுத்தம் சம்மந்தமாகப் பல விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டத்திற்கு முரனான செயற்பாடுகள் குறித்தும் அவற்றினைத் தடுக்கும் முகமான விடயங்கள் குறித்தும் தவிசாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் முக்கியமாகக் கலந்து கொண்டிருக்க வேண்டிய சுற்றுச்சூழல் திணைக்களம் மற்றும் பொலீஸ் திணைக்களம் என்பன அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் கலந்து கொள்ளாமையினால் பல விடயங்களை செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் இவ்விடயங்கள் தொடர்பாக அக்கறையுடன் செயற்பட்டு சுற்றுச் சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்து, வளமான காரைதீவு பிரதேசத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தவிசாளரினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.