கல்முனை ஸக்காத் நிதியத்தின் உப பொருளாளர் ஹாரூன் மறைவுக்கு முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்….

கல்முனை பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் உப பொருளாளரும் பிரபல பெற்றரி கடை உரிமையாளருமான நண்பர் முஹம்மட் ஹாரூன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துக்கமும் அடைந்துள்ளேன் என்று கல்முனை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நானும் ஒரு வாடிக்கையாளர் என்ற ரீதியில் அன்னாருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளேன். எனது நீண்ட கால உறவுக்குச் சொந்தக்காரர்.

எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். சமூக சேவைகளிலும் மிகவும் அக்கறையுடன் கூடிய ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார். ஏழைகளுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர். அதனால் பைத்துஸ் ஸக்காத் அமைப்பிலும் அங்கம் வகித்து, முக்கிய பொறுப்பை வகித்து வந்திருக்கிறார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் ஹாரூன் அவர்கள், அதற்கான  மருத்துவங்களை மேற்கொண்டு வந்திருந்தார். அப்போதெல்லாம் நாங்கள் ஆறுதலையும் தெம்பையும் வழங்கி வந்தோம்.

இந்நிலையில் அவரது திடீர் மறைவானது எமது கல்முனை மாநகருக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது. றமழான் மாதத்தின் ஒரு புனிதமான தினத்தில் அவரை இறைவன் தன்னகத்தே அழைத்திருக்கிறான்.

அன்னாரது மறைவினால் துயறுற்றிக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.