கற்றாழையும் வெந்தயமும் கூந்தலுக்கு செய்யும் மாயஜாலம் !
கூந்தல் அழகாய் இருக்க அதிக விலை கொடுத்து தான் பெற வேண்டும் என்பதில்லை. இயற்கையில் இருக்கும் பொருள்களை கொண்டும் கூந்தலை பட்டுபோன்று அழகுபடுத்திகொள்ளலாம்.அதை பயன்படுத்த சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.பயன்படுத்தும் பொருள்கள் எல்லாமே பக்க விளைவு இல்லாதவை, அதிக பலன் தருபவை, ஆனால் அதையும் உரிய முறையில் பயன்படுத்தும் போது அதன் பலன் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். அப்படியான பொருள்களை கொண்டதுதான் வெந்தயமும், கற்றாழையும். இரண்டுமே அதிக பலன்களை தருபவை. அதை இணைத்து பயன்படுத்தினால் கிடைக்கும் அற்புதமான அழகை பற்றி தெரிந்துகொள்வோம்.
கற்றாழை
![samayam-tamil samayam tamil](https://static.langimg.com/thumb/msid-75215364,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
இவை இருந்தால் பியூட்டி பார்லர் பக்கம் கூட செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. கற்றாழை உச்சி முதல் பாதம் வரை அழகுகுறிப்பில் பயன்படுத்தலாம். வறண்ட கூந்தல், இளநரைக்கு தீர்வு, முடி அடர்த்தி, கருமையான கூந்தல் பெற, வளர்ச்சி பெற என்று கூந்தலுக்கும், கரும்புள்ளி, பருக்கள், முகத்தில் வறட்சி, தேமல், கருமை போன்ற பிரச்சனைக்கும் தீர்வாக சருமத்துக்கும் பயன்படுத்துகிறோம்.
கற்றாழையை தனியாகவே பயன்படுத்தலாம் என்பதோடு இவை எந்தவிதமான பக்கவிளைவையும் கூட உண்டாக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கற்றாழை பயன்படுத்தலாம். அழகோடு சருமப்பிரச்சனைகளையும் சேர்த்து களையும் கற்றாழையை அழகு பொருள்கள் உடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
வெந்தயம்
![samayam-tamil samayam tamil](https://static.langimg.com/thumb/msid-75215363,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
வெந்தயம் குளிர்ச்சிமிக்கது. உடல் உறுப்புகளுக்கும் வெளிப்பகுதிக்கும் குளுமை தரகூடியது. வெந்தயத்தை பொடித்து வைத்துகொண்டால் அதை முகத்துக்கு பேக் போட்டு வந்தாலே முகத்தில் தனி மினுமினுப்பு கூடும். உஷ்ணமான கூந்தலுக்கு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் கூந்தல் உஷ்ணம் பிரச்சனையிலிருந்து நீங்கிவிடும்.
அந்த காலத்தில் வெந்தயப்பொடியை குளியல் பொடியிலும் தலைக்கு சீயக்காய் பொடியிலும் கலந்து குளிப்பார்கள். வெறும் வெந்தயத்தை பொடித்து பாலில் குழைத்து முகத்தில் தடவி கழுவி வந்தால் ஃபேஷியல் எஃபெக்ட் கிடைக்கும். இப்படி அழகு தரும் வெந்தயத்தையும் கற்றாழையையும் சேர்த்து பயன்படுத்தினால் முடி வளர்ச்சியும் கருமையும் ஆச்சரியப்படுத்தும் அளவு அதிகமாக இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்
![samayam-tamil samayam tamil](https://static.langimg.com/thumb/msid-75215361,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
கற்றாழையை வாங்கி இரண்டு பக்கமும் அதன் முனைகளை வெட்டி எறிந்து நீரில் அலச வேண்டும். அதன் மஞ்சள் நிறம் நீங்கும் அளவுக்கு நீரில் அலசியதும் அதன் இரு பக்கவாட்டிலும் இருக்கும் முற்களை அகற்றிவிடவேண்டும். பிறகு அதன் மடலை இரண்டாக வெட்டி முழுவதுமில்லாமல் பாதி அளவு இருந்தால் போதும். அதில் 5 முதல் 8 டீஸ்பூன் அளவு வரை வெந்தயத்தை சேர்த்து மடலை மூடிவிட வேண்டும்.
வெந்தயம் கற்றாழைக்குள் 10 மணி நேரம் ஊறினால் போதுமானது. ஏனெனில் இதை தேங்காய் எண்ணெயில் ஊற்றி கூந்தல் தைலம் காய்ச்சுவதாக இருந்தால் தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊறவைக்க வேண்டும். ஊறிய வெந்தயத்தில் கற்றாழை ஜெல் முழுவதும் ஊறியிருக்கும்.
முடிக்கு பயன்படுத்தும் போது
![samayam-tamil samayam tamil](https://static.langimg.com/thumb/msid-75215360,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
இரண்டுமே குளிர்ச்சி மிக்க பொருள் என்பதால் மிகுந்த கவனத்துடன் கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊறிய வெந்தயத்துடன் இரண்டு சாம்பார் வெங்காயம், தலையில் ஒட்டுண்ணி, பொடுகு, செதில் உதிர்வு பிரச்சனை இருந்தால் அவர்கள் 6 மிளகு சேர்த்துகொள்ளலாம். இவை குளிர்ச்சியையும் குறைக்கும்.
அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் வழவழவென்ற வெந்தயமும் கற்றாழை ஜெல்லும் சேர்ந்து மேலும் வழவழப்புடன் கூடிய ஜெல் கிடைக்கும். இதை கூந்தலின் மீது மட்டும் வேர் முதல் நுனி வரை தடவி விட வேண்டும். சுத்தமான காட்டனில் இந்த விழுதை தொட்டு தலையின் ஸ்கால்ப் பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போதே ஸ்கால்ப் பகுதியில் குளிர்ச்சி தெரியும். அதனால் முடிக்கு தேய்த்த பிறகு 10 நிமிடங்கள் கழித்து ஸ்கால்ப் பகுதியில் தேய்க்க வேண்டும். பிறகும் 10 நிமிடங்களில் தலைக்கு குளிக்க வேண்டும்.
பட்டு கூந்தல்
![samayam-tamil samayam tamil](https://static.langimg.com/thumb/msid-75215359,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
ஒரு முறை பயன்படுத்திய உடனேயே கூந்தலின் தன்மையை நீங்கள் உணர்வீர்கள். கூந்தலை அதிகம் ஷாம்பு, சீயக்காய் இல்லாமல் இலேசாக சேர்த்து தலையை தேய்த்து குளிக்க வேண்டும் கூந்தலை கைகளால் தொடும் போதே அதன் மென்மையை உணரமுடியும். கூந்தலில் மினுமினுப்பும் அதிகப்படியான பளபளப்பும் கொடுக்கும். முடி உதிர்வு பட்டென்று நிற்கும். அலைஅலையாய் பட்டுபோன்ற கூந்தல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியான முறை இது.
குறிப்பு
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், குளுமை அதிகம் இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். 20 நிமிடங்களுக்கு மேல் கண்டிப்பாக கூந்தலில் ஊறவிட வேண்டாம். மாதம் இரண்டு முறை செய்துவந்தால் 5 வது முறையில் கூந்தல் உறுதி பெற்று பலமடையும்.
கருத்துக்களேதுமில்லை