முதன் முதலில் ஹேர் டை போடும்போது இந்த தப்பை செய்தா நரைமுடி அதிகமாயிடும்!

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலேசாக இளநரை எட்டிபார்ப்பது வழக்கம். ஆனால் தற்போது 30 வயதை கடக்கும் போதே இளநரை எட்டிபார்க்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு காரணம் உணவு பழக்கமும், சத்து குறைபாடும் என்பதை அறிந்து அதற்கு தீர்வு காணாமல் எடுத்தவுடன் ஹேர் டை நாடிவிடுகிறார்கள்

பிரஷ்ஷை உபயோகப்படுத்தும் போது முறையாக பயன்படுத்த வேண்டும்.உரிய இடைவெளியில் கூந்தலை அலசிவிட வேண்டும். குறிப்பாக இராசயனம் குறைந்த ஹேர்டை பயன்படுத்த வேண்டும். நிறத்தையும் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஹேர்டையில் இருக்கும் அமோனியா கூந்தலிலும் தலையிலும் கூட அலர்ஜியை உண்டாக்கிவிடும். அதனால் அமோனியா இல்லாத ஹேர் டை பயன்படுத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கு போதுமான அளவு இருக்காது.

தலையை ஒட்டி அழுத்தமாக ஒரே முறை கருப்பாக்கிவிடவேண்டும் என்று அதிக அளவு டை உபயோகிப்பதால் இரண்டு பக்கமும் முடிபாதிப்பையும் கூடுதலாக சந்திக்கும். பலரும் செய்யும் தவறு சுயமாக ஹேர்டை பயன்படுத்துவதுதான். 10 ரூபாய்க்கு கிடைக்கும் ஹேர்டை பாக்கெட்டுகளை எளிதாக பயன்படுத்தலாம் என்று நினைத்து உரிய முறையில் பயன்படுத்த தெரியாமல் தலை முழுக்க அப்பி கொள்வதால் அவை கூந்தலுக்கு கருமையை தருவதோடு அதிக பாதிப்பையே உண்டாகிறது.


அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்தும் போது தலையில் படியும் நச்சுக்கள் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். ஹேர் டை பயன்படுத்திய சில நாள்கள் வரை கூந்தலில் கருப்பு நிறம் இருக்கும். பிறகு முடியின் தன்மையும் மாறிவிடும். முடி விரைவில் உலர்ந்து கடினமாக மாறிவிடும். சிலர் ஹேர்டையால் முடி நிரந்தரமாக கருப்பாக மாற வேண்டும் என்று ஹேர்டை போட்டு நீண்ட நேரம் தலைமுடியை அலசாமல் வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் மணிக்கணக்கில் கூந்தலில் பூசி அப்படியே வைத்திருப்பார்கள். இதனால் முடியுடன் சருமமும் சேர்ந்து பாதிக்கப்படும்.

முழுமையாக நரை முடி இருந்தாலும் கூட ஹேர்டையை அவ்வபோது பயன்படுத்தாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே அதில் குறிப்பிட்டிருக்கும் படி குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும். ஹேர்டை போடும் போது கூந்தலில் மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் மீசை மீது தடவுவதும், பெண்கள் புருவத்தின் மீது தடவுவதும் விபரீதமான விளைவை உண்டாக்கும்.

ஹேர்டை போட்டபிறகு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசுவதோடு கூடவே கண்டிஷனர் பயன்படுத்துவதையும் மறக்க கூடாது. ஹேர்டையால் சொரசொரப்பாகும் முடியை ஓரளவு மிருதுவாக்க உதவுவது கண்டிஷனர் தான். சிலர் ஹேர்டை போட்டபிறகு தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்துவதில்லை. இதனால் முடி அதிகப்படியான சொரசொரப்புக்கு உள்ளாவதோடு ஹேர்டை நச்சுகள் இன்னும் அதிகமாகவே உடலினுள் சென்றுவிடும்.

ஹேர்டை பயன்படுத்திய பிறகு தலைக்கு அடிக்கடி குளித்தால் எண்ணெய் வைத்தால் முடி கருமை நீங்கிவிடும் என்று பலரும் இதை தவிர்க்கிறார்கள். ஆனால் ஹேர் டை பயன்பாட்டுக்கு பிறகும் கூந்தலுக்கு உரிய பராமரிப்பை செய்ய வேண்டும்.

தற்போது ஹேர்டையில் பலவகைகள் வந்துவிட்டது. நிரந்தரமாக நீண்ட நாள் இருக்கும் வகையில் கூட ஹேர்டை வந்துவிட்டது. ஆனால் இவை எல்லாமே நச்சு கலந்தவை என்பதை மறக்க வேண்டாம். இளவயதில் உங்கள் முடியில் ஒரு நரையை கண்டாலும் இயற்கை முறையில் அதை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து அதை செய்யுங்கள்.

ஏனெனில் இயற்கைக்கு மாறாக கெமிக்கல் ஹேர்டை பயன்படுத்தும் அனைவரும் முதல் முறை இந்த தவறுகளை செய்துவிடுவது உண்டு. இதனால் கூந்தல் மேலும் மேலும் பாதிப்பை அடையுமே தவிர கருமையை எப்போதும் உண்டாக்காது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இதனால் இருக்கும் கருப்பு முடியும் வெள்ளையாக மாறிவிடும் அபாயமும் உண்டு.

அதனால் தான் முதல் முதலில் ஹேர் டை பயன்படுத்தும் போது அனுபவமிக்க அழகு கலை நிபுணர்களிடம் ஆலோசித்து அதன் பிறகு அவர்களிடமே போட்டு கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். மேலும் இளவயதில் ஓரிரு இளநரைகளுடன் வருபவர்களுக்கு உரிய பராமரிப்பும், உணவு முறையுமே போதுமானது என்பதை வலியுறுத்தவும் செய்வார்கள். அதோடு செயற்கை முறையை விட இயற்கை முறையில் கூந்தலை கருமையாக்கும் வழிமுறைகளையே அறிவுறுத்தவும் செய்வார்கள். குறிப்பாக 45 வயதை கடந்தவர்களுக்கு தலை முழுக்க நரை இருந்தால் மட்டுமே அவர்கள் விரும்பினால் மட்டுமே கெமிக்கல் ஹேர்டை போடப்படுகிறது. மற்றபடி இயற்கை முறையில் ஹேர்டை பயன்படுத்துவதை தான் பலரும் விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறார்கள் பெரும்பான்மையான அழகு கலை நிபுணர்கள்.

சருமம் போன்று கூந்தலுக்கும் நிறமளிக்கும் மெலனின் உற்பத்தி குறைவால் தான் கூந்தல் விரைவில் இளநரையை சந்திக்கின்றன. உணவில் இரும்புசத்து, துத்தநாகம், கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். உணவில் அதிகளவு முட்டை சேர்த்து வரவேண்டும். உயிர்ச்சத்து நிரம்பிய காய்கறிகளையும் உணவுகளையும் அன்றாடம் சேர்த்துவர வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

கண்ணாடி முன்பு ஒரு நரைமுடி கண்டதுமே ஹேர்டை நோக்கி ஓடுபவர்கள் ஒரு நிமிடம் நின்று கேடுதரும் ஹேர்டை தேவையா என்பதை யோசிப்பது நல்லது. அதோடு இவை கூந்தலுக்கும் அழகு தராது. சருமத்துக்கும் நன்மை செய்யாது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.