பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் சருமத்தை பாதிக்க செய்யும்.

குழந்தையின் சருமத்தை பாதுகாக்க ஒரே வழி முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை குளியல் பொடிதான். இவை குழந்தையின் பட்டுபோன்ற சருமத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது. அதோடு குழந்தையின் சருமம் பட்டுபோன்று வழவழப்பாக மென்மையாகவும் இருக்கும்.


இயற்கை பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பொடியை நீங்களே தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாமா?
மூலிகை பொடிக்கு தேவையான பொருள்கள்:

பாசிப்பயறு – 250 கிராம்,
வேப்பிலை, துளசி- தலா 25 கிராம்,
வெந்தயம்- 25 கிராம்,
ஆவாரம்பூ – ஒரு கைப்பிடி,
எலுமிச்சை தோல்- 20 எண்ணிக்கை அளவு,
சந்தனம்- 50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் – எண்ணிக்கை 10,
பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்,

வெட்டிவேர்- சிறிதளவு,’
மகிழம்பூ- 10 கிராம்,
பூந்தி கொட்டை – 5
பச்சை அரிசி- ஒரு கைப்பிடி.

கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.

எலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். பச்சை அரிசியை காயவைக்க வேண்டியதில்லை. வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள்.

மிஷினில் நைஸாக அரைத்தாலும் அதை மெல்லிய வெள்ளை துணியில் வடிகட்டி சலித்து காற்றுபுகாத டப்பாவில் அடைத்துகொள்ளுங்கள். இதை இந்த பொருள்கள் அரைக்கும் போது கடலை பருப்பையும் கால்கிலோ அளவு வாங்கி மிஷினில் தனியாக அரைத்து அதையும் சலித்து வைத்துகொள்ளுங்கள். கடலை மாவு மட்டும் அவ்வபோது அரைத்துகொள்ளவும். ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருந்தால் அதில் பூச்சி பிடிக்க வாய்ப்புண்டு. மற்ற பொருள்களை அரைத்த மாவு ஆறுமாதங்கள் வரை நன்றாகவே இருக்கும்.

குழந்தைக்கு குளிக்கவைக்கும் முன்பு அகலமான கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் கடலை மாவுக்கு இரண்டு டீஸ்பூன் குளியல்பொடி கலந்து பாலில் குழைத்துகொள்ளுங்கள். ஐந்துநிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.

பிறகு குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த பொடியை நன்றாக தேய்த்து உடல் முழுக்க பூசி குளிப்பாட்டுங்கள். பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் உடலில் இருக்கும் முடி விழும் அளவுக்கு அழுத்தம் இல்லாமல் தேய்த்துவந்தால் போதும். ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் இந்த பொடியை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சளை ஒன்றுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

இதே பொடியை குழந்தையின் தலைக்கும் தேய்த்து குளிப்பாட்டலாம். முடியும் மென்மையாக இருக்கும். பச்சரிசி சேர்ப்பதால் அழுக்கு நீங்கும். வெந்தயமும் பூந்திகொட்டையும் சேர்ப்பதால் நுரையும் வரும். பாசிப்பயறு மாவு பளபளப்பை தரும்.

குழந்தைக்கு 3 மாதங்கள் முடிந்த பிறகு இந்த மூலிகை பொடியில் பன்னீர் கலந்து குழைத்து தேய்த்து குளிப்பாட்டலாம். குளிர்ச்சி நிறைந்த பொருளாக வெட்டிவேர், சந்தனம், பாசிப்பயறு, வெந்தயம் போன்றவை இருக்கிறது. நறுமணத்துக்கு ரோஜா இதழும் உண்டு. சரும நோய்கள் அண்டாமல் இருக்க துளசியும் வேப்பிலையும் உதவுகின்றன. இவை தவிர இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருள்களுமே சருமத்துக்கு ஊட்டச்சத்தை கொடுப்பதோடு சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் சரும நோய்கள் அண்டாமலும் பாதுகாக்கின்றன. எல்லாவற்றையும் விட குழந்தையின் நிறம் கூடுதலாக ஜொலிக்கவும், பளபளப்பாக்கவும் செய்கின்றன. பட்டுபோன்ற சருமத்தையும் நிரந்தரமாக தருகின்றன.

இந்த பொடியையே குழந்தை வளர வளர பயன்படுத்தலாம். அதற்கேற்ப சரும பாதுகாப்பை அளிக்கும் பொருள்களையும் சேர்க்கலாம். இந்த பொடி வகைகள் பயன்படுத்தப்பட்டு வளரும் குழந்தைகள் வளர்ந்த பிறகும் சரும நோய்கள் இல்லாமல் வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு இயற்கை தரும் பொருளை கொண்டு அழகுப்படுத்தி கொள்வதை விட குழந்தை பருவம் முதல் இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் ஆரோக்கியமான சருமம் நிச்சயம் பெறலாம். இதை பயன்படுத்திய பிறகு நீங்களே குழந்தையின் பட்டு சருமத்தை விரும்ப தொடங்குவீர்கள். நீங்களும் கூட பயன்படுத்தலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.