குதிகால் வெடிப்பை நிரந்தரமாக போக்கும் வீட்டு வைத்தியம்!

உடலை தாங்கி பிடிக்கும் கால்களை அழகாக வைத்திருக்க வேண்டும். இது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. குதிகால் வெடிப்பு பிரச்சனையை சந்தித்துவிட்டால் பாதத்தில் வலியும் உபாதையும் சற்று அதிகமாகவே இருக்கும். குதிகால் வெடிப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய வேண்டும் இல்லையெனில் அவை அதிகமாகி கால்களை அசிங்கமாக்கிவிடும். ஆரோக்கியத்தையும் குலைத்துவிடும். குதிகால் வெடிப்பு சாதாரண கைவைத்தியத்தின் மூலமே விரைவில் சரிசெய்ய முடியும். அப்படி செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

​வேப்பிலை நீர்

samayam tamil

குதிகால் வெடிப்பு, சேற்றுப்புண், விரலிடுக்கில் பூஞ்சை தொற்று எல்லாமே கிருமிகளால் வரக்கூடியதே. முதலில் பாதங்களிலிருந்து கிருமிகளை அகற்ற வேண்டும். குதிகால் வெடிப்பின் ஆழத்தை பொறுத்து கிருமிகளையும் வெளியேற்ற முடிவு செய்யவேண்டும்,

இந்த பராமரிப்பை காலை நேரம் தவிர்த்து மாலை அல்லது ஓய்வாக இருக்கும் நேரங்களில் செய்ய வேண்டும்.

தேவை

வேப்பிலை- 3 கைப்பிடி அளவு

தண்ணீர் – 2 லிட்டர்

ஸ்க்ரப் பிரஷ் ,

தண்ணீரை கொதிக்க வைத்து வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விடவும். வேப்பிலையின் எசென்ஸ் முழுவதும் நீரில் இறங்கி இருக்கும். அதை அப்படியே இறக்கி சூட்டை ஆறவிடவும். மிதமான சூட்டில் கால் பொறுக்கும் சூட்டில் இருந்ததும் அகலமான பேஷனில் ஊற்றி கால்களை அதில் நனைத்தபடி வைக்கவும்.

10 நிமிடங்கள் குறையாமல் கால்கள் வேப்பிலை நீரில் இருக்க வேண்டும். அப்போது பொறுமையாக ஸ்க்ரப் பிரஷ் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்த்து எடுக்கவும். 10 லிருந்து 20 நிமிடங்கள் வரை இரண்டு கால்களையும் பொறுமையாக தேய்த்து எடுத்து பிறகு மெல்லிய சுத்தமான துணியில் பாதங்களை துடைத்து இலேசாக ஆலிவ் ஆயில் போட வேண்டும்.

​கல் உப்பும் மஞ்சள் தூளும்

samayam tamil

மஞ்சள் தூள் சிறந்த கிருமி நாசினி என்பது தெரியும். அதே போன்று கல் உப்பும் கிருமிகளை நீக்குகிறது. மேலும் இவை பாதத்தை பளிச்சென்று ஆக்கவும் செய்யும்.

தேவை

கல் உப்பு- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 3 டீஸ்பூன்

தண்ணீர் தேவைக்கு –

கல் உப்பை நுணுக்கி மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து சிறிதளவு எடுத்து வெடிப்பு இருக்கும் பகுதிகளில் தடவிகொள்ளுங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து மீதியிருக்கும் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவிடுங்கள். மிதமான சூட்டுக்கு வந்ததும் இப்போது குதிகால் வெடிப்பு நீரில் மூழ்கியிருக்கும்படி வைத்து கைகளால் மென்மையாக தேயுங்கள். ஏற்கனவே வெடிப்பின் மீது உப்பு மஞ்சள் தூள் கலந்த கலவை தடவியிருந்தாலும் வெடிப்பின் உள்ளே இருக்கும் கிருமிகளை வெளியேற்ற மஞ்சள் நீர் உள்ளே செல்ல வேண்டும். அதனால் பாதத்தை மெதுவாக அந்த நீரை கொண்டு மசாஜ் செய்தபடி தேய்த்து கழுவ வேண்டும். இந்த நீரை கொண்டு பாதத்தை கழுவிய பிறகு பாதத்தை உலரவைத்தாலே போதும். எண்ணெய் தடவ வேண்டாம். அப்போதுதான் கிருமிகளின் தாக்கத்தை மஞ்சள் முற்றிலும் நீக்கும்.

​அழுக்குகள் நீங்க கடலைமாவு

samayam tamil

குதிகால் வெடிப்பு என்று சொன்னாலும் வெடிப்புக்குள் உள்பகுதியில் அழுக்குகள் படிந்து கறைபோன்று கருப்பாக இருக்கும். அவை கால் பாதங்களின் அழகை கெடுத்து காண்பிக்கும்.

இரவு நேரத்தில் கால்களை சுத்தமான நீரில் கழுவி குதிகால் வெடிப்பின் மீது ஃபேக் போடலாம்.

தேவை

கடலை மாவு – 3 டீஸ்பூன்

கற்றாழை சாறு- 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

மூன்றையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளவும். இதை பாதங்கள் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். இயன்றால் இலேசாக ஸ்கரப் செய்வது போல் தடவவேண்டும். அவை நன்றாக காயும் வரை விட்டு மிதமான வெந்நீரில் தேய்த்து கழுவ வேண்டும். பிறகு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயில் கொண்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவை பாதங்கள் வெடிப்பினால் வறட்சி அடைவதை தடுத்து அழகாக வைக்க உதவும்.

பொலிவுக்கு

samayam tamil

குதிகால் வெடிப்பு இருக்கும் போது பாதங்களை வறட்சியிலிருந்து காக்கவும் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது தக்காளியை வட்டவடிவில் இரண்டாக நறுக்கி உருளைக்கிழங்கு சாறு தொட்டு பாதம் முழுக்க ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவை பாதங்களில் நீண்ட நாள்களாக இருக்கும் கருமையை போக்கி பாதத்தை பளிச்சென்று வைக்க உதவும்.

உருளைக்கிழங்கு சாறு வெடிப்பினால் கடினமாக இருந்த பாதத்தை மென்மையாக்க உதவும். பாதங்கள் மட்டும் அல்லாமல் விரல்கள் கணுக்கால் முட்டிகள் என்று அனைத்து இடங்களிலும் ஸ்கரப் செய்தால் கால்கள் முழுமையும் பளிச் என்று இருக்கும். வெடிப்புகள் மென்மையாவதால் அவை மறைவதும் விரைவாக நடக்கும். குதிகால் வெடிப்பு கடினமாக இருப்பதை மென்மையாக மாற்றவே உருளைக்கிழங்கு சாறும் தக்காளியும்.

​எப்போதும் சுத்தம்

samayam tamil

கண்ணுக்குதெரியாத தூசிகள் கால்களில் இருப்பதால் தான் பாதங்களில் அழகு குலைகிறது. வெளியிலிருந்து வந்ததும் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு கால் விரல்கள். பாதங்களில் சுத்தமான தேங்காயேண்ணெய், வைட்டமின் இ ஆயில், ஆலிவ் ஆயில் ஏதேனும் ஒன்றை இலேசாக மசாஜ் செய்ய வேண்டும். அதிகம் தூசி இருக்கும் இடங்களில் நடமாட்டம் இருந்தால் கால்களில் ஷாக்ஸ் அணிவது பாதத்தை பளீரென்று வைக்கும்.

பாதங்களை சுத்தமாக வைத்திருந்தாலே குதிகால் வெடிப்பு உண்டாவது குறையும். சிறுவயதிலிருந்தே ஆண்கள் பெண்கள் இருவருமே பாதங்களை ஈரப்பதமாக சுத்தமாக வைத்திருந்தால் பாதங்களில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். அழகாகவும் இருக்கும். உங்கள் குதிகாலில் வெடிப்பு இருந்தால் அதை போக்கி நீங்களும் உங்கள் பாதத்தை பராமரியுங்கள். நிச்சயம் பாதம் பளிச்சென்று மின்னுவதை பார்க்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.