மாயா! குளோனிங் மூலம் பிறந்த உலகின் முதல் ஓநாய்; சீன விஞ்ஞானிகள் சாதனை

உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த சினோஜின் பயோ டெக்னோலொஜி நிறுவனம் ஆர்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது.
உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் இதுவே. பெய்ஜிங் ஆய்வகத்தில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி பிறந்த இந்த ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 

மாயா எப்படி உருவாக்கப்பட்டது?
ஒரு பெண் நாயின் அணுக்கருக்கள் மற்றும் ஒரு பெண் ஆர்க்டிக் ஓநாயின் சோமாடிக் செல்கள் ஆகியவற்றிலிருந்து 130க்கும் மேற்பட்ட புதிய கருக்களை உருவாக்கி அவற்றை கரு வளர்ச்சியைத் தொடங்குமாறு செயற்கையாக தூண்டிவிடப்படும். இவ்வாறு வளரும் கருவானது, பின்னர் ஒரு வாடகைத் தாயின் வயிற்றில் பொருத்தப்பட்டு முழுக்குட்டி உருவாகும் வரை வளர்த்தெடுக்கப்படும். இதன்மூலம் உருவாகும் குட்டியானது கருமுட்டைக்குச் சொந்தமான விலங்கின் மரபு நகலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குளோனிங் என்றால் என்ன?
குளோனிங் என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். குளோனிங் முறைக்கு அடிப்படை, கலவியில்லா இனப்பெருக்கம். உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் விலங்கு செம்மறி ஆடு ஆகும். குளோனிங் தொழில்நுட்பம் மூலமாக இதுவரை பூனை, நாய், எலி, குரங்கு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்க பல நாடுகளில் தடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.