கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா?

கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக நீங்கள் எதையும் சாப்பிடத் தேவையில்லை. அதாவது, நீங்கள் ஏற்கெனவே என்ன சாப்பிட்டுக்கொண்டிருந்தீர்களோ, அதையே இந்த மூன்று மாதங்களில் சாப்பிட்டால் போதுமானது.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, தலைச்சுற்றல் அதிகமாக இருக்கும். அதனால் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். எனவே, அப்படி இருந்தால் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேர்கின்றனவா என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

4 முதல் 6 மாதங்கள் வரையிலான இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரில் நீங்கள் 2,200 கலோரிகள் வரை சாப்பிட வேண்டும். அதாவது 300 முதல் 350 கலோரிகள் வரை அதிகமாக நீங்கள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக இன்னொரு வேளை உணவு சாப்பிட வேண்டும் என்றில்லை. ஒரு டம்ளர் பால் குடித்தாலே அதிலிருந்து உங்களுக்கு 150 கலோரிகள் கிடைத்துவிடும். அந்த வகையில் இரண்டு டம்ளர் பால் குடித்தாலே அந்த அதிகப்படியான 300 கலோரிகள் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

Pregnant woman

Pregnant woman

7 முதல் 9 மாதங்கள் வரையிலான மூன்றாவது ட்ரைமெஸ்ட்டரில் மொத்தமாகவே 2,400 கலோரிகள்தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் கர்ப்பம் தரிப்பதற்கு முன் நீங்கள் சாப்பிட்டதிலிருந்து 400 முதல் 450 கலோரிகள் வரை அதிகம் சாப்பிட வேண்டி யிருக்கும். இதற்கும் நீங்கள் இரண்டு டம்ளர் பாலுடன் ஒரு முட்டையோ, பத்து பாதாமோ சாப்பிட்டாலே போதுமானது.

எனவே, கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சாப்பிட வேண்டும் என அதிகம் சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம். ஆனால், அந்த எடையானது கர்ப்பத்தின் போதான பி.எம்.ஐ-யைப் பொறுத்தது. ஒருவேளை உங்களுடைய முந்தைய கர்ப்பத்தில் மிகக் குறைவாகவே எடை கூடியிருந்தால் அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் 18 கிலோ வரைகூட எடை கூடலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.