பாலியல் வன்முறைகளை இராணுவ யுக்தியாக பயன்படுத்தும் ரஷ்யா – ஐ.நா பிரதிநிதி

ரஷ்யா – உக்ரைன் போரின் ஒரு பகுதியாக உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன என ஐ.நா பிரதிநிதி ஒருவர் ரஷ்யா மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 -ஆம் திகதி ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், போரில் பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய செய்தி ஊடகமான AFP-க்கு ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பாட்டன் அளித்த பேட்டியில், “ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து உக்ரைன் கொடூரமாகக் காட்சியளிக்கிறது. ரஷ்யா உக்ரைனின் மீது நடத்திய போரில் பாலியல் வன்முறையை ‘இராணுவ யுக்தியாக’ பயன்படுத்தி உள்ளது. உக்ரைன் நகரங்களின் தெருக்களில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சடலங்கள் ரஷ்யாவின் கேவலமான போர் நெறியைக் காட்டுகிறது. ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன.

மேலும் ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா மாத்திரைகள் மற்றும் போதைப் பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வருகிறது.

பெண்களை பல நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்தும், சிறுவர்கள் மற்றும் ஆண்களிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டிருக்கின்றனர். 4 வயது முதல் 82 வயதுள்ள பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மேலும் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளன. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கைகள் இதை விட அதிகமாக இருக்கும் எனச் சந்தேகிக்கிறோம். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து பல பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். முழுக்க முழுக்க ரஷ்யா, பெண்கள் மீதான பாலியல் வன்முறையையே போர் யுக்தியாக பயன்படுத்தியுள்ளது ” என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் உக்ரைனின் உள்துறை துணை அமைச்சர் கேத்தரீனா பௌலிச்சென்கோ, பாலியல் குற்றங்கள் குறித்து ரஷ்ய வீரர்கள் மீது 50 புகார்கள் வந்துள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.