சீன ரொக்கெட் பாகங்கள் பசுபிக் சமுத்திரத்தில் விழுந்தன

சீனா விண்ணில் சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான உபகரணங்களை கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி, லாங் மார்ச்-5பி ரொக்கெட் மூலம் அனுப்பியது. 108 அடி நீளமும், 23 தொன் எடையும் கொண்ட அந்த ரொக்கெட், தான் சுமந்து சென்ற உபகரணங்களை விண்வெளி நிலையத்தில் சேர்த்தது. பின்னர் ரொக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் பூமியை நோக்கி திரும்பின. அந்த ரொக்கெட் பாகங்கள், அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி பூமியில் விழும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தப் பகுதியில் சரியாக விழும் என்பதை சீனா உறுதி செய்யவில்லை.


இந்த நிலையில் ரொக்கெட்டின் பாகங்கள் வளி மண்டலத்தில் நுழைந்து தெற்கு மத்திய பசிபிக் சமுத்திரப் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளிக் கழகம் தெரிவித்துள்ளது. ரொக்கெட் பாகங்கள் பூமிக்குத் திரும்பும் போது வளி மண்டலத்தில் எரிந்து சாம்பராகும். ஆனால் சீன ரொக்கெட் பாகங்கள் பூமியில் விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்பு ரொக்கெட் பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

ரொக்கெட்டின் வடி வமைப்பின்படி பூமியின் எந்த பகுதியில் விழ வேண்டும் என்ற வழிகாட்டி அமைப்போ அல்லது மக்களிடம் இருந்து தொலைவில் விழுவதற்கான அமைப்போ அதில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. சீன ரொக்கெட் பாகங்கள் பூமியில் விழுவது இது 4ஆவது முறையாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.