ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ட்ரம்ப்- புடின் பேச்சு!

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும், தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு உள்ளன.

எனவே, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த உரையாடலில், புதிய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாகவும், கொரோனா தடுப்பில் இணைந்து செயற்படுவது குறித்தும், இருநாட்டு ஜனாதிபதிகள் கலந்துரையாடினர்.

இதற்கிடையே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இடையே ஆயுதப் போட்டி இருப்பதை, ஜனாதிபதி ட்ரம்ப் விரும்பவில்லை. இதையடுத்து, விரைவில் வியன்னாவில் நடைபெற உள்ள ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான நடைமுறையில் உள்ள ‘நியூ ஸ்டார்ட்’ (New START) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், மீண்டும் புதுபிக்கப்படுமா என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை பெருக்கிக்கொள்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

உலக அமைதிக்கு முக்கியமான இந்த ஒப்பந்தம், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி, செக் குடியரசின் தலைநகரம் ப்ராக்கில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில், குறித்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி காலாவதியாக உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தம் நீடிக்கப்படுமா என்ற கேள்விக்கு இரு தரப்பிலும் இருந்து எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை.

ஆனால், குறித்த ஒப்பந்தத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரை நீடிக்க ரஷ்யா விரும்புகிறது. ஆனால், ட்ரம்ப் அதை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் இல்லாமல் போனால் கட்டுப்பாடில்லாத ஒரு புதிய அணு ஆயுதப் போட்டி நடக்கக்கூடும் உலக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.