அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்தில் இரு வல்லரசுகளின் களமாக மாறியஆப்கானிஸ்தான்.

இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு அமெரிக்கா – சோவியத் யூனியன் ஆகிய இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கிடையில் ஒன்றையொன்று வீழ்த்துகின்ற வியூகத்தில் அதிஉச்ச பனிப்போர் நிலவியது.

அமெரிக்க புலனாய்வாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்படுவதும், அதுபோல் ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படுவதும் அப்போதைய தலைப்பு செய்திகளாகும்.

ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதுபோல் உலகத்துக்கு இரண்டு வல்லரசுகள் இருக்க கூடாது என்ற நிலை காணப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் யூனியன் முன்னிலை வகித்ததுடன் அமெரிக்காவைவிட அதிகமான அணு ஆயுதங்கள், நவீன போர் தளபாடங்கள், அதிவேக யுத்த விமானங்கள், நீண்ட தூர ஏவுகணைகள்கடல் கலங்கள் போன்றன சோவியத் யூனியனிடமே இருந்தது.  

தன்னைவிட சக்திபடைத்த எவரும் இந்த உலகில் இருக்க கூடாது என்பது அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு. இதனால் சோவியத் யூனியனைவிட அதிநவீன இராணுவ சாதனங்கள் தயாரிப்பதில் அமெரிக்கா முழு கவனம் செலுத்தியது.

அமெரிக்காவுடனான வியட்னாம் யுத்தத்தில் வியட்னாமின் “ஹோசிமின்” யின் படைகளுக்கு பின்னணியின் சோவியத் யூனியன் இருந்துகொண்டு உதவி வழங்கியதனாலேயே அமெரிக்கா தோல்வியடைந்தது. இதனால் சோவியத் ரஷ்யாவை பழி தீர்ப்பதற்கு அமெரிக்கா சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது.

தனது எதேச்சதிகாரத்துக்கும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கின்ற சோவியத் யூனியனுடன் நேரடி மோதலுக்கு தயாரில்லாத நிலையில், சோவியத் யூனியனை பலயீனப்படுத்துவதற்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டது.   

இந்த இரு பெரும் வல்லரசுகளுக்கிடையிலான ஆதிக்க போட்டியில் சோவியத் யூனியனை வீழ்த்துவதற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தானை அமெரிக்கா குறிவைத்தது.

அத்தோடு ஆப்கானின் நீண்டதூர எல்லையைக்கொண்ட நாடான ஈரான் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் நேசநாடாக இருந்தது. ஆனால் அங்கு 1979 இல் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு ஈரான் தனது எதிரி நாடாக மாறியதனால் மத்திய கிழக்கையும், ஆசியா கண்டத்தையும் இணைக்கும் முக்கிய பிராந்தியமாகவும் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கருதியது.

அமெரிக்காவுக்கு இஸ்ரேல் விசுவாசமான நாடாக எவ்வாறு உள்ளதோ, அதுபோலவே சோவியத் யூனியனுக்கு நம்பிக்கைக்குரிய நாடாக ஆப்கானிஸ்தான் இருந்தது. சோவியத் யூனியனின் மன்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லெனினின் “கொமியுனிச ஆட்சி” நிறுவப்பட்டதும் அதனை முதன் முதலாக அங்கீகரித்த நாடும் ஆப்கானிஸ்தான் ஆகும்.

இதனால் சோவியத் ரஷ்யாவிடமிருந்து ஆப்கானிஸ்தானை பிரிப்பதுடன், பலம்மிக்க சோவியத் யூனியனை பல கூறுகளாக பிரிக்க வேண்டும் என்பதும் அமெரிக்காவின் நீண்டகால திட்டமாகும்.

ஆப்கானிஸ்தானில் புரட்சிகள் ஏற்பட்டாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஆப்கானின் அனைத்து ஆட்சியாளர்களும் சோவியத் ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசிகளாகவே இருந்துவந்தனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆப்கானிஸ்தானின் உலமாக்கள், இமாம்களிடமிருந்து ஓர் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையினால் ஆப்கானிஸ்தானின் எதிர்கால தலையெழுத்து மாறப்போகின்றது என்பதனை எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அறிக்கை என்னவென்பதனை இதன் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

தொடரும்……………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.