ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகள்: நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனச் சொல்லும் அரசு…

ஆஸ்திரேலியாவின் டார்வின், மெல்பேர்ன், பிரிஸ்பேன் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 அகதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறான விடுவிக்கப்பட்டவர்களில் ஈரானிய அகதியான அபாஸ் மகாமெஸ் தனது குடும்பத்தினருடன் டார்வினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சமூக தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடுதலை மிகவும் அழகானது,” என 9 ஆண்டுகள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அகதியான அபாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அபாஸ்-யின் குடும்பம் 2013ல் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பின்னர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்பு நவுருத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அங்கு 7 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

“தடுப்பில் மிக அச்சமாக இருந்தது. கூண்டில் அடைப்பட்டு கிடந்தது போல் இருந்தது,” என தடுப்புக்காவல் அனுபவத்தை விவரித்திருக்கிறார் ஈரானிய அகதியான் அபாஸ்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை பேச்சாளர், “ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் தெளிவாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் வந்தவர்கள் இங்கு குடியமர்த்தப்பட மாட்டார்கள். இங்கு மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு அவர்கள் அமெரிக்காவிலோ அல்லது வேறு ஒரு மூன்றாவது நாட்டிலோ குடியேறலாம் அல்லது நவுரு, பப்பு நியூ கினியா தீவுக்கோ திரும்பலாம் அல்லது தாய்நாட்டிற்கே திரும்பிச் செல்லலாம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில், தற்போது விடுவிக்கப்பட்ட 33 அகதிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.