11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார், பாகிஸ்தானுடனான டெஸ்ட் இன்று ஆரம்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட போதிலும், பாகிஸ்தான், இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை திட்டமிட்டபடி இன்று ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இறுதியாக 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் பங்குபற்றியது.

இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் உட்பட 14 வீரர்கள் நேற்று புதன்கிழமை திடீர் சுகவீனத்துக்குள்ளாகினர். இவர்களுக்கு வைரஸ் பாதிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது கொவிட்19 அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டிருந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பயிற்சியொன்றில் இங்கிலாந்தின் 5 வீரர்கள் மாத்திரமே பங்குபற்றினர்.

இதனால், இப்போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதாக என தீர்மானிப்பதை பாகிஸ்தான் நேரப்படி இன்று காலை 7.30 மணிவரை ஒத்திவைப்பதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்திருந்தன.

இன்று காலை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் நிக் பியர்;ஸ், அணியின் மருத்துவர் அனித்தா பிஸ்வாஸ் ஆகியோர் வீரர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதையடுத்து. 11 பேர் கொண்ட அணியை களமிறக்குவதற்கு தான் தயார் என இங்கிலாந்து – வேல்ஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாகவும்  இப்போட்டியை திட்டமிட்டபடி நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.