தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்பு நாளை திறப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நாளை(செப். 17) நடைபெறும் விழாவில் பங்கேற்று, காணொலி வாயிலாக திறந்துவைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு வேலூரில் தொடங்கிவைத்தார். ரூ.142.16 கோடியில் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 13 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, 1,591 குடியிருப்புகள் திறப்பு விழா வேலூரில் நாளை நடைபெற உள்ளது.

வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், வீடுகளை பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைக்க உள்ளார். மேலும், காணொலி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.11 கோடியில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.