கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கின்றார் சந்தோஷ் ஜா!

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தார்.

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுகளில் முக்கிய பங்கை ஆற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதி போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமைதாங்கியுள்ளார்.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இலங்கை – இந்திய புதிய இணைப்புகள் குறித்து டெல்லி  கூடுதல் ஆர்வம் செலுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றல் சக்தியை மையப்படுத்திய குழாய் இணைப்புகள் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் திருகோணமலையில் இந்தியா திட்டமிட்டுள்ள உத்தேச ஆற்றல் சக்தி மையம் தொடர்பான விடயங்களும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி திட்டமும் இரு நாடுகளினதும் அவதானத்திற்கு உட்பட்டவைகளாகும்.

மேலும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி  மற்றும் நகர அபிவிருத்தி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார ரீதியிலான இணைப்புகளை இருநாடுகளுக்கும் இடையில் வலுப்படுத்திக் கொள்வதில் டெல்லி ஆர்வமாக உள்ளது.

இருப்பினும் திட்டங்களை முன்னெடுப்பதில் மந்தகதியான செயல்பாடுகளே காணப்படுகின்றன. இவற்றை சீர் செய்து இலங்கையில் உத்தேசிக்கட்டுள்ள இந்திய திட்டங்களைத் துரிதப்படுத்துவது புதிய இந்திய உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்கும் சந்தோஷ் ஜா முன்பாக உள்ள இலக்குகளாகும்.

எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும் 2017 – 2019 ஆண்டுகளில்  வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன்  2015  – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று  பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா  கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க – இந்திய அணுவாயுத பேச்சு குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.