சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு!

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின், அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள 18 பிராந்திய அணிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் அதிசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் (பி.பி.சி) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 40 சதவீத வாக்குகளைப் பெற்று குமார் சங்கக்கார தெரிவானார்.

வாக்கெடுப்பில் இடம்பிடித்த ஏனைய வீரர்களான பாகிஸ்தான் வீரர்களான சக்லைன் முஷ்டாக் 21 சதவீத வாக்குகளையும், இன்டிகாப் அலாம் 20 சதவீத வாக்குகளையும், மேற்கிந்திய தீவுகளின் சில்வெஸ்டர் கிளார்க் 19 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

சர்ரே அணிக்காக 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 33 போட்டிகளில் பங்குகொண்டு 14 சதங்களுடன் 3,400 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் 1,941 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

42 வயதான குமார் சங்கக்கார, கிரிக்கெட்டின் விதிமுறைகளை வகுக்கும் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தற்போது செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.