ரஜினியின் ‘2.0’, கமலின் ‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ செய்த சாதனை!

“கோலிவுட்டில் 400 கோடி ரூபாய் வசூல் செய்தப் படங்களில் பொன்னியின் செல்வன் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இந்தப் படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், வந்தியத் தேவனாக கார்த்தியும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷமியும், வானதியாக ஷோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால், முதல்நாளிலேயே இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் அஜித்தின் வலிமை (ரூ. 36.17 கோடி) மற்றும் விஜயின் பீஸ்ட் (ரூ.31.4 கோடி) ஆகியப் படங்களைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் 25.86 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து மூன்றாவது இடம் பிடித்தது. மேலும் அமெரிக்காவில், ரஜினியின் 2.0 படத்தின் வசூல் சாதனையையும் இந்தப் படம் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே பொன்னியின் செல்வன் படம், 8 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை செய்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 2.0 மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து, 400 கோடி ரூபாய் கிளப்பில்
பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது. படம் வெளியான 11 நாட்களிலேயே பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த வசூலை ஈட்டியுள்ளது. மேலும் வருகிற கோடைவிடுமுறையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.