கேரளாவில் உருவானது ‘கொரோனா தேவி’ ஆலயம்!

கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தேவி ஆலயத்தை உருவாக்கி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தி வருகிறார்.

கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்குப் பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளைக் கும்பிட வேண்டியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தோற்றத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.

இதுகுறித்து அணிலன் கூறுகையில், “33 கோடி இந்துக் கடவுள்களுடன் கூடுதலாக மேலும் ஒரு கடவுள். தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துவேன்.

கோயில்கள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் பிரசாரத்திற்கு எதிரான போராட்டம் என்பதால் தரிசனம் இருக்காது என்பதும் தெரியும்.

தெர்மோகால் (Therma Cole) மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தேவி எந்த ‘மூலமந்திரமும்’ இல்லாத தெய்வம் ஆகும். கேரளாவில், பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது.

இது யாரையும் கேலி செய்யும் முயற்சியல்ல. அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர். வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல.

இந்த ஆலயம் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பெயர்களில் பூஜைகள் நடைபெறும். பிரசாதம் விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன். தரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் கிடைக்கும்”  என்று கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.