ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள்.

மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பாதுகாப்பு சபையின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் ஆசிய – பசுபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. இதில் இந்தியாவுக்கு ஆசிய – பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த சீனா, பாகிஸ்தான் உட்பட 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் தேர்தலுக்கு முன்பே இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஐ.நா. வின் 193 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிகளும் வாக்களிப்பதற்கு வசதியாக தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்து.

ஒவ்வொரு நாட்டுக்கான நேரத்தை தெரிவித்து ஐ.நா. சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே அனைத்து நாடுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

ஐ.நா. பொதுச் சபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வாக்களித்தனர். அனைத்து நாடுகளும் வாக்களித்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில், 184 வாக்குகள் இந்தியாவுக்கு விழுந்ததையடுத்து, இந்தியா இமாலய வெற்றி பெற்றது.

இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. இந்தியா 8வது முறையாக ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பினராகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.