தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதித்திட்டம் முன்னெடுப்பு – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்)

தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை லுணுகலை பிரதேசத்தில் 30.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றன. பதுளை மாவட்டத்தில் அண்ணன் அரவிந்தகுமாரும், நானும் ஓருயிர் ஈருடல்போல இணைந்து களமிறங்கியுள்ளோம். எமக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்படுகின்றது.

இன்று இந்த நாட்டிலே இனவாதம் தலைதூக்கியுள்ளது.  சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எமது அரசியல் இருப்பை நாம் கட்டாயம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு பாரிய சதித்திட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சமூகவலைத்தளங்களில் சேறுபூசப்பட்டுவருகின்றது.

தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையினத்தவர்கள் சரியான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.  தமிழ் இளைஞர், யுவதிகளை தவறாக வழிநடத்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு பதுளை மாவட்ட தமிழர்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதிகள் நடக்கின்றன.

எனினும், எமது மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர். எமக்கே வாக்களிப்பார்கள். பொதுத்தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.