விக்னேஸ்வரன், அலி சப்ரிக்கு முன்வரிசையில் ஆசனங்களா? – நாடாளுமன்றத்தில் சஜித் அணி போர்க்கொடி!!!

முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கும் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்தது.

பல வருடங்கள் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட எம்.பிக்களுக்கு பின்வரிசைகளில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாகத் தெரிவானவர்களுக்கு முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கியமை அநீதியானதென ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்றுக் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த எஸ்.எம்.மரிக்கார், “நாடாளுமன்ற விவகார குழு உறுப்பினராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு அலி சப்ரிகள் சபையில் உள்ளனர். இது எந்த சப்ரி என தெளிவுபடுத்த வேண்டும்?” என்று கோரினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த நளின் பண்டார எம்.பி., “30 வருடங்களாக நாடாளுமன்றம் தெரிவான எம்.பிக்கள் இருக்கையில் முதன்முறையாக தெரிவான சிலருக்குக் கட்சித் தலைவர்கள் என்று முன்வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சி சார்பில் வந்த ஒரேயொரு எம்.பிக்கு இவ்வாறு முன்வரிசை வழங்கினால் 40 தலைவர்கள் தெரிவானால் முன்வரிசையைப் புதிதாக அமைக்க நேரிடும்.இதனை மாற்ற வேண்டும்” – என்றார்.

ஆளும் தரப்பில் எஸ்.பி.திஸாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கும் பின்வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதனையும் சீர்செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதையடுத்து எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. கூறுகையில், “இது தொடர்பாக நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சித் தலைவர் கூட்டத்தில் இது பற்றி ஆராயப்படும்” – என்றார். இது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்திற்கு 15 கட்சிகள் சார்பில் எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். இதில் எதிரணி வரிசையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கு முன்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் முன்வரிசை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் முன்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
……..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.