பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

அண்மையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

 

வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற பொழுது உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி போராட்டம் ஒன்றை பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு நுவரெலியாவில் இன்று (24) ஏற்பாடு செய்திருந்தது.

 

இதன்போது பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் இன்று (24.11.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

 

இறுதியாக நடைபெற்ற க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அண்மையில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெட்டுப் புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு அவை வெளியிடப்பட்டுள்ளன.இந்த வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

 

இறுதியாக நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையானது புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாகவுமே இரண்டு முறைகளில் நடைபெற்றது.இந்த அடிப்படையில் வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

 

இவ்வாறான ஒரு நிலைமை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொழுது அந்த சந்தர்ப்பத்தில் சரியான முறையை கையாண்டு அதற்கான தீர்வு சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இம்முறை அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை  அதிகாரிகள் தங்களுக்கு என்ன தோன்றியதோ அதனையே செய்திருக்கின்றார்கள்.இதனால் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுடைய மாணவர்கள்.

 

இதன் காரணமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.உதாரணமாக ஏ 2 பி பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

மேலும் மாணவர்களை ஒன்லைன் மூலமாக பதிவு செய்யுமாறு கேட்டிருக்கின்றார்கள்.அனைவருக்கும் அந்த வசதி இருக்கின்றதா?என்பது ஒரு கேள்விக்குறியே.இதன் காரணமாக இன்று மாணவர்கள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.மாணவர்கள் மாத்திரமன்றி அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றார்கள்.

 

இதன் காரணமாக எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதற்கான நிலை இருக்கின்றது.இந்த விடயத்தை நாங்கள் இன்று நுவரெலியாவில் போராட்டம் செய்தது போல நாடு முழுவதும் செய்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.இதற்கு உரிய பதிலை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.