தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமாகியது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்படி ,பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது. காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அனைவரும் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது.

முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, “ இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுஇ கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 788 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் ,சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.