வவுனியாவில் பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு: இருவர் கைது

வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (19.05) காலை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 58 வயதுடைய பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு பிறிதொரு நபரின் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான  (37348) திஸாநாயக்க, (61461) திலீப, (36099) விக்கிரமசூரிய, (60521) சதுரங்க, பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான (91792) தயாளன், (93786) தம்மிக்க, (47388) பிரியங்கர ஆகியோர் இணைந்த பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரையும்,  தோணிக்கல் பகுதியயைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து இரண்டரைப்பவுண் தாலிக்கொடியும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.