இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்!

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்!

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாய நிலைமையை நோக்கி நாடு நகர்வதாக ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

நாட்டை முடக்குமாறு துறைசார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துவரும் பின்னணியில், இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா எதிர்க்கட்சி தலைவரது கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையை முழுமையாக முடக்கும்படி சுகாதாரத்தரப்பினர், விசேட மருத்துவ நிபுணர்கள் மட்டுமன்றி உலக சுகாதார அமைப்பும்கூட அண்மையில் கோரிக்கை முன்வைத்திருந்தது. எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையே அறிவித்துள்ளது.

நாட்டை முடக்கும்படி சுகாதார மருத்துவ நிபுணர்களால் இதுவரை தங்களுக்கு பரிந்துரைக்கவில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் தெரிவிப்பது உண்மையில் நகைப்பிற்குரியதாகும். மக்கள் உயிர் அச்சுறுத்தலில் உள்ள நாட்டில் எங்கு அபிவிருத்தியை காண்பது? பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் நோயாளர் படுக்கைகள் தட்டுப்பாடாக காணப்படுகின்றன.

நானும்கூட மரண பயத்தில் தான் உள்ளேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் காலையிலேயே மக்கள் வாக்குக் கடமையை செய்யும்படியும் தனது கடமையை தாம் சரிவர செய்வதாகவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இன்று ஒட்டுமொத்த மக்களும் நாட்டை முடக்கும்படி கோருகின்ற நிலையில், அசசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றது.

ஒரு மில்லியன் சனத்தொகையில் ஒரு வாரத்திற்கு அதிகளவானோர் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் பட்டியலில் உலகளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா நான்காவது இடத்திலுள்ளது. தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்கா முதலிடத்திலுள்ளது. ஸ்ரீலங்காவில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர் கொவிட் தொற்றால் உயிரிழப்பதாக ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 1.95 வீதமாகவும், இங்கிலாந்தில் 1.33 வீதமாகவும் , பிரான்ஸில் 0.76 வீதமாகவும் , இந்தியாவில் 0.3 வீதமாகவும் காணப்படுகிறது. அதற்கமைய இந்தியாவை விட ஸ்ரீலங்காவில் மரண வீதம் 15 மடங்கு அதிகமாகும்.

இவ்வாறான நிலையில் உடனடியாக ஊரடங்கினை நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் பதிவாகக் கூடிய 1,200 மரணங்களை தவிர்க்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது உலக நாடுகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.