முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்! வைகோ அறிக்கை.

தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின்
மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக
முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு
இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள் கட்டித்தருதல், முகாம்களில் மின் வசதி, குடிநீர், கல்வி
மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகள், நிகழும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட இருப்பது,
மகிழ்ச்சி அளிக்கின்றது. அதேபோல, அவர்களது குடி உரிமை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு
அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல் அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில்
பணிபுரிவதற்காக, தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை, பிரித்தானியர்கள்
அழைத்துக்கொண்டு சென்றனர்.

இருபதாம் நூற்றாண்டில், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் இலங்கை விடுதலை பெற்றது.
அப்போது, அந்த நாட்டின் மலையகப் பகுதிகளில், தேயிலை, காப்பித் தோட்டங்களில்
பணிபுரிந்து கொண்டு இருந்த, இந்தியர் வழித்தோன்றல் தமிழர்கள் 10 இலட்சம் பேர்களுக்கு
இலங்கைக் குடி உரிமை கிடையாது; அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என
அறிவித்தனர்.

பிறப்பின் அடிப்படையில் குடி உரிமை வழங்குவது, உலகம் முழுமையும் பெரும்பாலான
நாடுகளில் உள்ள நடைமுறை ஆகும். ஆனால், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கே வாழ்ந்து,
பல தலைமுறைகள் கடந்து விட்ட தமிழர்களுக்குக் குடி உரிமை கிடையாது என, இலங்கை அரசு
அறிவித்தது, மனித உரிமைகளுக்கும், பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரான நடவடிக்கை ஆகும்.

அதை எதிர்த்து, மலையகத் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

‘இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற
இந்தியர்களுக்கு, அந்த நாடுகளில் குடி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது; அதுபோல,

இலங்கையும், குடி உரிமை வழங்க வேண்டும்’ என, பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்
தலைமையிலான இந்திய அரசு, வலியுறுத்தியது.

1953-54 ஆம் ஆண்டுகளில், இலங்கைப் பிரதமர் சர் ஜான் கொத்தலாவல, பண்டித நேரு
ஆகியோர் இடையே பேச்சுகள் நடைபெற்றன. ஆனால், குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு
எட்டப்படவில்லை.

இந்தப் பிரச்சினை, 15 ஆண்டுகளாக நீடித்தது.

1962 இல், இந்திய-சீன எல்லைப் போர் வெடித்தது. ஏற்கனவே, கிழக்கு பாகிஸ்தான்
பிரச்சினையில், மேற்கு பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நீடித்து வந்தது. அதனால், இந்திய
அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டது. இலங்கையுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கக்
கருதி, இந்தியர் வழித்தோன்றல் தமிழர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இசைந்தனர்.

1964 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இலங்கைப்
பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே ஆகியோர், ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.

அதன்படி, ‘5,25,000 இலட்சம் பேரை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது; மீதம் உள்ள 3
இலட்சம் பேருக்கு, இலங்கைக் குடி உரிமை அளிப்பது’ எனத் தீர்மானித்தார்கள். படிப்படியாகத்
தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கினர்; நீலகிரி, கொடைக்கானல் தேயிலைத் தோட்டப்
பகுதிகளில் குடி அமர்த்தப்பட்டனர்.

10 ஆண்டுகள் கடந்த பிறகு,1974 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப்
பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே இருவரும், அந்த உடன்படிக்கையைப் புதுப்பித்தனர்.
தாயகம் திரும்பி வர வேண்டியவர்களுள் 1,50,000 பேரை இரு நாடுகளும் சரிபாதியாகப் பிரித்து,
குடி உரிமை வழங்குவது எனத் தீர்மானித்தனர். அதன்படி, இலங்கை குடி உரிமை அளித்து
விட்டது.

1987 ராஜிவ் காந்தி – ஜெயவர்த்தனே செய்து கொண்டஉடன்படிக்கையிலும், இலங்கையில்
உள்ள இந்தியக் குடிமக்கள் தாயகம் திரும்புவதை விரைவுபடுத்த வேண்டும் எனக்
குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

தற்போது, தமிழக அரசு மறுவாழ்வுத் துறையிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, 1984 ஆம்
ஆண்டு வரை, 4 இலட்சத்து 71 ஆயிரம் பேர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, இந்தியக்
குடிமக்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றனர். உடன்படிக்கையின்படி, இந்தியக் குடி உரிமை பெறத்
தகுதி உள்ள, 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர்.

1983 ஆம் ஆண்டு, இலங்கையில் வெடித்த ஜூலை இனக்கலவரத்தின் போது
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனவே, உயிர் தப்புவதற்காக,
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத்தமிழர்கள், படகுகளில் இந்தியாவுக்கு
வந்தனர்; அவர்களுடன், மலையகத் தமிழர்களும் வந்தனர். அப்போது வந்த அனைவருமே,
தமிழ்நாட்டில் 100 முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுள், மலையகத் தமிழர்கள் சுமார் 28000 பேர். இப்போது, அவர்களுக்குப் பிறந்த
குழந்தைகளையும் சேர்த்து, 45000 பேருக்குக் கூடுதலாக உள்ளனர். இந்தியக் குடி உரிமைச்
சட்டத்தின்படி, இவர்கள் குடி உரிமை பெறத் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் அனைவருமே,
அகதிகளாக வந்து குடியேறியவர்களாகக் கருதப்படுவதால், இவர்களுக்குக் குடி உரிமை
மறுக்கப்படுகின்றது.

சட்ட விரோதமாக வந்தவர்கள் என்றால், ரகசியமாக வந்திருக்க வேண்டும். ஆனால், போரின்
காரணமாக அடைக்கலம் தேடி வந்தவர்கள்; அரசால் முறையாக வரவேற்று, ஆவணங்களில் பதிவு
பெற்று, முகாம்களில் குடி அமர்த்தப்பட்டவர்கள். எனவே, இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள்
அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய, தமிழ்நாடு அரசுகளின் உதவிகளைப் பெற்று
வருகின்றவர்கள்.

இவர்கள் அனைவருக்குமே, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் குடி உரிமை வழங்க
வேண்டும். ஈழத்தமிழர்களுள் சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்களும், இந்தியக் குடி உரிமை
கோருகின்றார்கள். அவர்களுக்கும் குடி உரிமை வழங்க வேண்டும்.

அவர்களுள் ஒரு பகுதியினர், இலங்கைக்குத் திரும்பிச் செல்லவும் விருப்பம் தெரிவித்து
இருக்கின்றார்கள். அவர்களுடைய உடைமைகளை, வான் ஊர்திகளில் கொண்டு செல்ல
முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளைச்
செய்து தருகின்றது. வான் ஊர்தி பயணக் கட்டணம், செலவுத் தொகை வழங்குகின்றார்கள்.

அப்படி ஏற்கனவே அங்கே சென்றவர்களுக்கு, உறுதிமொழி அளித்தபடி, உதவிகள்
கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புகள் இல்லை; நிலம் திரும்பக் கிடைக்கவில்லை. தங்குவதற்கு
இடமும் இன்றி, உறவினர்களின் வீடுகளில் தங்கி இருக்கின்றனர்.

அதனால், இனி அங்கே போக விழைவோர் தயங்குகின்றனர். அவர்கள் அங்கே செல்ல
வேண்டுமானால், அவர்களுக்கான வீடு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்த
வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும்.

இந்திய இலங்கை உடன்படிக்கைகளின்படி, இந்தியாவுக்குத் திரும்ப வந்து, நீலகிரி,
கொடைக்கானல் பகுதிகளில், தேயிலைத்தோட்டங்களில் குடி அமர்த்தப்பட்டவர்களுக்கு
அப்போது அரசுகள் வழங்கிய உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
அவர்களது வசிப்பிடங்களில், அடிப்படை வசதிகள் இல்லை. அதுகுறித்தும், தமிழக அரசு ஆய்வு
செய்ய வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர்களுக்கு, பல நாடுகள் குடிஉரிமை வழங்கி
இருக்கின்றன.

ஒருவர் பிறப்பின் அடிப்படையில் குடி உரிமை பெறலாம்; இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும்
மேலாகத் தங்கி இருப்பதால் குடி உரிமை பெறலாம்; இங்கே உள்ளவர்களைத் திருமணம்
செய்தவர்கள் குடி உரிமை பெறலாம்; இப்படிப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், சட்டத்திற்கு
எதிராகக் குடியேறியவர்கள் என்று கூறி, அவர்களுக்குக் குடி உரிமை மறுக்கப்படுகின்றது.
அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல என அறிவித்து, அவர்களுடைய விருப்பத்தைக்
கேட்டு அறிந்து, குடி உரிமை வழங்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்; ஒன்றிய அரசை
வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.