இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை

வைகோ எச்சரிக்கை

டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது.

மேலும், “9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும்” என்று அமித்ஷா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்த முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றத்திலிருந்து இந்தியைத் திணிப்பதற்கான அரசு ஆணைகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.

ஒன்றிய அரசின் அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ வலைதளங்களில், இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் கோப்புகள் இந்தி மொழியில் தயாரிக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள் இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும்.

வங்கித் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற வேண்டும்.

இந்தி மொழியை தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக (Sub-title) திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை -2020 இல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற பரிந்துரை,

இதன் உச்சமாக 2019, செப்டம்பர் 14 இல் டெல்லியில் நடந்த இந்தி நாள் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் பன்னாட்டு அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை இணைக்க இந்தி மொழியால்தான் முடியும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தி மொழி மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிடும்.” என்று இந்தித் திமிரோடு பேசினார். அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தற்போதும் அதைப்போல மீண்டும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறார். இந்தி மொழியால் இந்தியாவை இணைக்க முடியாது. இந்திதான் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றுமை உணர்வை சிதைத்துவிடும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் உணரவில்லை.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1938 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் மொழி உரிமைக்காகப் போராடியதை மறந்துவிட வேண்டாம்.

1965 இல் தமிழ் நாட்டில் நடைபெற்ற நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், நாட்டையே உலுக்கியதை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பா.ஜ.க. அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.