அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா? உண்மை என்ன?

எல்லாருக்கும் தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் கண்ட கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கூந்தல் பராமரிப்பு க்ரீம்களை வாங்கி தேய்ப்பது, அடிக்கடி ஷாம்பு மாற்றுவது, வீட்டு வைத்தியங்கள் என்று நாமும் எதை எதையோ ட்ரை பண்ணி பார்ப்போம். இதுல கொஞ்சம் பேர் ரொம்ப யோசித்து அடிக்கடி மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

 

மக்களிடையே அடிக்கடி தலைமுடியை வழிப்பதால் முடி நன்றாக வளரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இது உண்மையா என்ன? கண்டிப்பாக கிடையாது என்கிறார்கள் நம்முடைய சரும மருத்துவர்கள். உங்களுடைய முடி வளர்ச்சிக்கும் மொட்டை அடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குழந்தையாக இருக்கும் போது கூட அடிக்கடி மொட்டை போட்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற போக்கு இன்றளவும் நம் மக்களிடையே காணப்படுகிறது.

நீங்கள் தலைமுடியை ஷேவிங் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது. எனவே மொட்டை அடிப்பது உங்க முடி வளர்ச்சியை அதிகரிப்பதில்லை. முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் சரும மருத்துவர்கள். ஆனால் மொட்டை அடிப்பதால் சில நன்மைகளும் கிடைக்கின்றன என்கிறார்கள் மக்கள் .

அடிக்கடி மொட்டை அடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

* பொடுகு பிரச்சினையின் அபாயத்தை குறைக்கிறது.

* தலையில் தேங்கியுள்ள தூசிகள், அழுக்குகள் எல்லாம் ஷேவிங் செய்வதால் வெளியேற்றப்படுகிறது

* ஆண்கள் மொட்டையடிப்பதால் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

* தலைமுடியை ஷேவிங் செய்த பிறகு முடி வளர்ச்சி அதிகமாகிறது. காரணம் தலைமுடியை ஷேவிங் செய்யும் போது வளர்ச்சிக்கு இடையூறாக முடியில் இருந்த அழுக்குகள், தூசிகள் எல்லாம் நீங்குகின்றன. அதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதற்கும் எந்த அறிவியல் சான்றும் இல்லை.

 

கூந்தலின் வளர்ச்சி எப்படி நடக்கிறது?

முடியின் வளர்ச்சியை பற்றி பேசுவதற்கு முன் அது எவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். நம்முடைய தலையில் உள்ள ஒரு முடி அதன் உண்மையான நீளத்தை அடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் உடலில் இருக்கும் முடிகள் வளர்வதை விட தலையில் இருக்கும் முடிகள் சீக்கிரமாக வெளியே வரும்.

நமது முடியின் வளர்ச்சி தோல் அடுக்கின் கீழே உள்ள மயிர்க்கால்களில் இருந்து ஆரம்பமாகிறது. முடியின் வேர்கள் உருவாக புரதம் மற்றும் இரத்தம் தேவைப்படுகிறது. முடியின் வேர்களில் இருந்து புறப்படும் முடிகள் அப்படியே வளர்ந்து மயிர்க்கால்கள், செபாசியஸ் சுரப்பிகள் (சரும எண்ணெயை சுரக்கும்) வழியாக செல்கிறது. இந்த சரும எண்ணெய் முடியின் வளர்ச்சிக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து உதவுகிறது. இந்த எண்ணெய் தான் நம் தலைமுடி தடினமாகவும், நீளமாகவும் வளர உதவி செய்கிறது.

 

உண்மை என்ன?

நீங்கள் தலைமுடியை மொட்டை அடிக்கும் போது அல்லது ஷேவிங் செய்யும் போது முடியை எடுப்பதோடு அதன் மீதுள்ள இறந்த செல்களையும் நீக்குகிறீர்கள். இந்த ஷேவிங் மேற்பரப்பில் மட்டுமே நடைபெறுகிறது. எனவே இதனால் முடியின் அமைப்பிலோ அல்லது முடியின் நிறத்திலோ அல்லது வளர்ச்சி விகிதத்திலோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே தலையை மொட்டை அடிப்பதால் புதிய முடி வளர்ச்சியை பாதிக்காது, அதே நேரத்தில் புதிதாக மயிர்க்கால்களும் உருவாகாது. இருக்கின்ற மயிர்க்கால்களில் இருக்கும் முடிகளே வளரும்.

 

கட்டுக்கதை

ஷேவிங் செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது கட்டுக்கதை மட்டுமே. எனவே முடி வளர்ச்சியை தூண்ட அடிக்கடி மொட்டை அடிப்பது ஒரு நம்பிக்கையற்ற ஒன்று. அதற்குப் பதிலாக முடி ஆரோக்கியத்தை தூண்டும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் கூந்தல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.