சிறுவர் நலனை மையப்படுத்தியே பிரதேச அபிவிருத்தி சிறுவர் தின உறுதிப்பிரமானத்தில் தவிசாளர் நிரோஷ்.

சிறுவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும்  முன்னுரிமையளித்தே  பிரதேசத்தின் அபிவிருத்தியினைத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இன்று (ஓக்டோபர் 01) காலை சபையின் அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான சபைக் கூட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுவர் தினம் ஆகையினால் சிறுவர் தொடர்பான விடயம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில், சபையின் எல்லைப் பரப்பிற்குள்; சிறுவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கு முன்னுரிமையளித்தே அபிவிருத்தியினையும் கருமங்களையும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான உறுதி மொழியினை மக்கள் பிரதிநிதிகளும் சபையின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் எடுத்துக்கொண்டனர்.
இவ் உறுதிமொழியினை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தவிசாளர்;, சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்தே வருகின்றன. அத்துடன் சிறுவர்கள் சமூகத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை பாரிய பிரச்சினைகளாக கருதாமல் சகஜமாக விட்டுவிடும் துர்ப்பாக்கிய நிலைமையும் காணப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் சமூகத்தில் விழிப்பினை ஏற்படுத்துவதுடன் காத்திரமாகவும் செயற்படவேண்டும்.   சகல அரச, தனியார், அரசசார்பற்ற தாபனங்களும் தமது செயற்றிட்டங்களில் சிறுவர்கள் தொடர்பான நலன்களுக்கு முக்கியத்துவமளிக்க பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
எமது உள்ளுராட்சி மன்றத்திற்கு சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பாரிய பொறுப்புள்ளது. பிரதேசத்தில் சிறுவர்களின் உடல் உள முன்னேற்றத்தினை நோக்காகக் கொண்ட உட் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது. வருடாவருடம் எமது வரவு செலவுத்திட்டம் ஊடாக சிறுவர் நலத்திட்டங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்கின்றோம்.
பிரதேசத்தில் சிறுவர்களுக்கான பாலர் கல்வி வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படு;த்தி வருகின்றோம். பிரதேச சபையின் முன்பள்ளிகளை வசதிக்குறைவான இடங்களில் உருவாக்கி வருகின்றோம். இவ்வாறாக ஆவரங்கால் முன்பள்ளி சிறப்பாக இயங்கியுள்ளது. இருபாலையில் மேலும் ஒரு நவீன முன்பள்ளியை அமைத்து வருகின்றோம்.
சபை, நூலக வாரத்தினைக் கூட சிறுவர்களின் தேடலை அதிகரித்தல் என்ற தொனிப்பொருளிலேயே நடத்தியது. ஆயுர்வேத வைத்தியசாலைகள் ஊடாக சிறுவர்களின் மருத்துவத் தேவைகள் விடயத்தில் இயங்குகின்றோம். பிரதேசத்தின் எந்த அபிவிருத்தியிலும் சிறார்களின் நலன்கள் பற்றிச் சிந்தித்தே முடிவுகள் எடுக்கின்றோம். அபிவிருத்தியில் சிறுவர்களின் அபிப்பிராயங்களும் உள்வாங்கப்படவேண்டும்.  அபிவிருத்திகளில் பிள்ளைகள் உச்ச அளவில் எப்படிப்பயனடைவர் என்பதை ஆராய்கின்றோம். முன்பள்ளிக் கல்வி முறை தொடர்பில் நடளாவிய ரீதியில் பலகுறைபாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன. முன்பள்ளிக் கல்வியில் அரசின் சரியான மறுசீரமைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் அவசியமாகவுள்ளன.
இவ் வருடம் நாம் வலிகாமம் கிழக்கில் பொது சிறுவர் பூங்காவினை தாபித்து உள்ளோம். மேலும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகளை முன்னுரிமைப்படுத்தி அமைத்துள்ளோம். சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வகையில் அவர்களது சிறுவர் நலன்களை மேம்படுத்தத் தக்க வகையில் தொடர்ந்தும் எமது சபை செயலாற்றும். அபிவிருத்தியில் சிறுவர்களின் அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.