யாழில் வீட்டு திட்ட நிதியினை முழுமையாக வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் !
வீட்டு திட்ட நிதியினை முழுமையாக வழங்குமாறு கோரி இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச செயலக பிரிவில், ஆனைக்கோட்டை ஜே 132 மற்றும் ஜே 133 கிராமஉத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 18ஆம் ஆண்டு அப்போதைய அரசினால் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாகவும், அதில் இரண்டு கட்டங்களாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.அத்தோடு குறித்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசால் வழங்கப்பட்ட அரைகுறை வீட்டில் வசித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்போது அவர்கள் ஒவ்வொருவரும் வேறு ஒருவர் மீது பழி போட்டுவிட்டு தாங்கள் தப்புவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திட்டத்தினை வழங்கும்போது தாங்கள் வசித்து வந்த தற்காலிக வீடுகளை இடித்து குறித்த புதிய வீட்டுத்திட்டத்தினை மேற்கொண்டதாகவும், தற்போது வசிப்பதற்கு இடமின்றி வெயில் மற்றும் மழைகளில் வசித்து வருவதாகவும் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தமக்கு உரிய நிதியை விரைவாக பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலும் தமது கோரிக்கை மகஜரினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
கருத்துக்களேதுமில்லை