வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியினை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்துவதற்காக குறித்த தொழில்நுட்பக் கல்லூரியினை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக  தற்போதுள்ள நிலைமையினை பேண  முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதாரப் பிரிவினர் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மீளத் திறப்பது சாத்தியமில்லை எனவும், அத்துடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் அதனை நடத்துவதா இல்லையா என தீர்மானிப்பதும், ஏனெனில் இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வு சம்பந்தமாக முடிவெடுக்க முடியாத நிலை காரணமாக அதனை மத்திய அரசின் அனுமதியோடு நடத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.