மட்டக்களப்பு-ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் பெப்ரவரி 1ம் திகதி கும்பாபிஷேகம்..

தசாப்தங்கள் கடந்து ஆன்மீகப் பணி, கல்விப் பணி, சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் வகிபங்கு மகத்தானது. சமகாலத்தில் மக்களிடையே புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினைகளுக்கு ஆன்மீகமும் பக்தி மார்க்கமும்தான் சிறந்த உபாயங்களாகின்றன. மாறிவரும் உலகின் இக்கட்டான காலகட்டங்களிலெல்லாம் சமுதாயத்தின் தேவையறிந்து சேவைசெய்யும் உன்னத நிறுவகமாக ராமகிருஷ்ண மிஷன் தன்னை நிலைநிறுத்தி விட்டது. அந்த வெளிப்பாட்டிற்கான செயற்படுத்தல் பாதையில் மட்டக்களப்பு கல்லடி- உப்போடையில் அமையப்பெற்றுள்ள ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலானது புதுப்பொலிவு பெற்று ஆன்மீக எழில்பொங்க மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவினைக் காணவிருக்கின்றது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளிற்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் வரவோடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம் திகதி திங்கட்கிழமை சித்தயோகம் கூடிய சுப வேளையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலிற்கான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள், கும்பாபிஷேகம், சிறப்பு யாகபூசை, பஜனைப் பாடல்கள், விசேட ஆராதனை வழிபாடுகள் முதலியவற்றுடன் பக்தர் உள்ளங்களில் சங்கமிக்க இருக்கின்றன. நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் ஏனைய பக்தர்கள் நிகழ்நிலை ஊடகங்கள் மூலமாக கும்பாபிஷேகத்தைக் கண்டு ஆன்மீக அனுபூதியினைப் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி நிகழ்வுகளை நேரலையூடாக பார்ப்பதற்கு www.youtube.com/user/rkmbat என்ற லிங்கை பயன்படுத்தலாம். திருக்கோயிலைத் நேரடியாக தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பிறிதொரு நாளில் குடும்ப சகிதம் வருகை தருமாறு அறுவுறுத்தப்படுகிறார்கள். பகவான் ஸ்ரீ ராமகிருஷணரின் கோயில் திருப்பணிக்காக மகத்தான சேவைகள் செய்த பக்தர்கள் நிதி நன்கொடையாளர்கள் பல ஊர்களில் நன்கொடை ஏற்பாடுகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் பிறிதொரு நாளில் சுவாமிகளால் அழைப்பு விடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து நிகழ்வுகளும் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் தலைமையில் இடம்பெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.