அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி!
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களில் வழமையான பயணிகள் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும்.
இருப்பினும் இன்று தொடக்கம் இம் மாதம் இறுதி வரையில் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதினால் மாகாணங்களுக்கிடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்று இலங்கை போக்குவரத்து சபைத்தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
அரச மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சில பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அத்தியாவசிய சேவையுடன் தொடர்புபடாத பயணிகள் இந்த பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் கூறினார்.
அத்தியாவசிய கடமைகளுக்காக வரும் ஊழியர்களுக்காக மாத்திரம் மாகாணங்களில் இருந்து கொழும்பு வரையில் 5 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.
இதே வேளை இன்று தொடக்கம் கொழும்பிற்கான பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று தொடக்கம் அனைத்து நகரத்திற்குமான பஸ் சேவை ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று ‘காணொளி’ மூலம் நடைபெற்றது. பிரதேசங்களில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப, பஸ்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தேவைக்கேற்ப சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை