மக்கள் வீதியில் காத்துக் கிடக்க ; அமைச்சு பதவிக்காக இருவர் ரணில் வீட்டு வாசலில் பாய்போட்டு படுத்துள்ளனர்… சாணக்கியன் எம்.பி சாடல்
மக்கள் வீதியில் காத்துக் கிடக்க ; அமைச்சு பதவிக்காக இருவர் ரணில் வீட்டு வாசலில் பாய்போட்டு படுத்துள்ளனர்… சாணக்கியன் எம்.பி சாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காமல் இராஜாங்க அமைச்சு பதவி கோரி மட்டக்களப்பு மாவட்ட இரண்டு அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக பாய் போட்டு படுத்து கிடப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் நேற்று புதன்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அங்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடி நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரையும் தொடர்புகொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
“தற்போதைக்கு எந்தவிதமான எரிவாயு இறக்குமதியும் இல்லை. எதிர்வரும் நான்காம் திகதிக்கு பின்னர்தான் இலங்கைக்கு எரிவாயு கப்பல் வரவிருப்பதாக அறிய முடிகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் மாவட்டத்துக்கு தேவைப்படுகின்ற போதும் வெறுமனே 15,000 எரிவாயு சிலிண்டர்களை கொண்டுவந்து என்ன செய்ய முடியும்.
குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காக பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான முறை காணப்படுகிறது.
மட்டக்களப்பில் உள்ள இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக எங்கேயும் கதைப்பதை காண முடியவில்லை. மக்கள் எரிவாயுவுக்காக வீதிகளில் பாய் போட்டு படுத்து உறங்கும் நிலையில் இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாசலுக்கு முன்பாக தங்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி பாய் போட்டு படுத்து கொண்டு இருக்கின்றார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை