ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்..

மாணவனை வடிவமைப்பதற்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது. சிறந்த வழிகாட்டிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் அளப்பரிய சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

மாணவர்கள் பேரும் புகழும் பெறும் பொழுது அவர்களை முதலில் பெருமையோடு கொண்டாடி மகிழும் உயர் குணம் நிறைந்தவர்களே ஆசிரியர்கள். ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்துக்குமான சிறந்த பணி ஆகும். பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்துக்கு ஈடிணை கிடையாது.

நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவர்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றி வரும் ஆசிரியர்களை நாம் போற்ற வேண்டும்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று சமுதாயம் ஆசிரியர்களை இறைவனுக்கு சமமாக மதிக்கிறது. நாம் எழுதவும், பேசவும், பழகவும், வாழவும் வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயம் போற்றப்பட வேண்டும். எண்ணற்ற மாணவ சமுதாயத்துக்கு என்றென்றும் ஏணிப்படிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் அறியாமை இருள் அகற்றி, அனைவர் வாழ்வும் மலரச் செய்தவர்கள். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.