இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் – டொனால்ட் லு

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (ளுரளயn றுயடமந) ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த உதவி இராஜாங்கச் செயலாளர், சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.