ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் எழுதியநூல் வவுனியாவில் வெளியீடு!

மூத்த செய்தியாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய ‘நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 27.05.2023 ஆம் திகதி வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு நிகழ்வு வவுனியா வடக்கு வலய ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வு நிலை உப பீடாதிபதி ந.பார்தீபன் வெளியீட்டுரை நிகழ்த்துவார்.

ஊடக நோக்கு என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், அரசியல் நோக்கு என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசியர் கே.ரி.கணேசலிங்கம், சமூகநோக்கு என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை வருகை விரிவுரையாளர், பத்திரிகையாளர் அ.நிக்ஸன் ஆகியோர் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், கவிஞர் லதா கந்தையா, வீரகேசரி நாளிதழ் உதவிச் செய்தி ஆசிரியர் ஆர்.ராம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

எழுத்தாளர் மேழிக்குமரன் வரவேற்புரை நிகழ்த்த ஓய்வு நிலைக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் அமரர் மாணிக்கவாசகத்தின் மனைவியுமான திருமதி நாகேஸ்வரி மாணிக்கவாசம் ஏற்புரையையும் நன்றி உரையையும் வழங்குவார்.

நூலாசிரியரான மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம் கடந்த (12.05.2023) ஆம் திகதி இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.