பொலிஸ் ஒழுக்காற்று விசாரணை குழு அறிக்கை கையளிப்பு

பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடைமுறைகளை துரிதப்படுத்தவும் நிர்வாக பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுக்காற்று நடைமுறை தொடர்பான விசாரணைகளுக்காக நீண்டகாலமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகள் போன்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் மற்றும்  பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.