கொரோனா பறித்தது இரண்டாவது உயிரையும்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மற்றுமொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இவரின் நிலைமை மோசமடைய கொரோனா தொற்று சந்தேகத்தில் நீர்கொழும்பு அரச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன்பின்னரே இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு இன்று மாலை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், நோய் தீவிரமடைந்து இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தன்னை சாதாரண நோயாளியாகவே காண்பித்துள்ளார். இவரின் உயிரிழப்பையடுத்து நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலை, நீர்கொழும்பு அரச வைத்தியசாலை ஆகியவற்றில் இவருக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் சிகிச்சை பெற்ற அறைகளும் மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.