மேலும் இருவருக்குக் கொரோனா! இதுவரை நால்வருக்குத் தொற்று!! – சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலைவரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

“இன்று பலாலிப் பகுதியில்  தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுகூட பரிசோதனையில் மேலும் இருவருக்கு ‘கொரோனா’ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இன்று மாலை ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆகவே, இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்குக் ‘கொரோனா’ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
இம்மூவரும் சுவிஸ் மத போதகருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மொத்தமாக இதுவரை 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது தொற்றாளரும்  சுவிஸ் மத போதகரை நேரில் சந்தித்து உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான அறிகுறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார அமைச்சினதும் அரசினதும் அறிவுரைகளை ஏற்று நடந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.