அரசை எச்சரித்தார் சம்பந்தர்! அமைதி காத்தார் மஹிந்தர்!

மக்கள் பட்டினியால் சாவதை விட ஊரடங்குச் சட்டத்தை மீறுவதற்கே முயற்சிப்பார்கள். எனவே அரசு அவர்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல விடயங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளால் நேற்றும் வலியுறுத்தப்பட்டது. அரசமைப்புக்கு அமைவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

அப்படியானால் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் அது நடைபெறவேண்டும். அந்த விடயம் நடக்கவேண்டுமாக இருந்தால் தேர்தல் மே மாதம் இறுதியில் 28ஆம் திகதியாவது நடக்கவேண்டும்.

தேர்தல் அந்தத் திகதியில் நடக்க தேர்தல் பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குச் சாத்தியமில்லாத நிலைமை காணப்படுகின்றது.

ஜூன் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் சட்டச் சிக்கல் எழும். அதனை விட தற்போதுள்ள காபந்து அரசின் பதவிக் காலமும் ஜூன் 2ஆம் திகதியுடன் முடிவடைந்து விடும். இதன் பின்னர் நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலைமை எழும்.

தற்போதைய புதிய சூழலைக் கையாள்வதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. அதற்கு சட்டவாக்க சபையான நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் விமல் வீரவன்ஸ, விஜயதாஸ ராஜபக்ஷ, உதய கம்மன்பில போன்றோர் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கொரோனா தொற்று தடுப்புக்காக அதிலிருந்து உயிர் பாதுகாப்புக்காக ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அன்றாட உழைப்பாளிகள் நிவாரணம் எதுவுமின்றி வாடுகின்றார்கள். அவர்கள் இப்படியே இருந்து பட்டினிச் சாவை எதிர்கொள்வார்களா? பட்டினியால் சாவதை விட ஊரடங்குச் சட்டத்தை மீறுவதற்கே முயற்சிப்பார்கள். எனவே அரசு அவர்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.