இலங்கையில் கொரோனா நிலைவரம்!
* பாதிப்பு 178
* கொழும்பில் – 44
* புத்தளத்தில் – 31
* களுத்துறையில் – 25
* கம்பஹாவில் – 13
* யாழ்., கண்டியில் – தலா 7
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 176 இலிருந்து 178 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இன்று வரை 44 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 31 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 25 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் 37 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 5 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 05 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 38 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய 135 நோயாளிகளும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது 257 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை