அதிகளவிலான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வடமாகாணத்தில் பதிவு: தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி அமைப்பு குற்றச்சாட்டு…

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வியூ) தெரிவித்துள்ளது.

தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் ஆதில் அலி சப்ரி, வட மாகாண அலுவலகத்தில் இடம்பெற்ற தேர்தல் கண்காணிப்பாளருடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்னளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 3000இக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் அரைவாசிக்கு அதிகமானவை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளது. அந்த வகையில் வடமாகாணத்தில் 1800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர், இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்ட விரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்கள் வட மாகாணத்தில் அதிகளவாகப் பதிவாகியுள்ளது.

அமைதிக் காலம் மற்றும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளும் வேட்பாளர்களும் திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும்.

‘தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்காத சில சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது. அவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளோம். பிரஜைகளிடமிருந்தே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பிரஜைகள் முறைப்பாடுகளை மேற்கொள்வது நல்ல முன்னேற்றமாகும். தேர்தலின் போது பிரஜைகள் தன்னார்வ அடிப்படையில் முறைப்பாடுகள் மேற்கொள்வதை ஊக்குவிப்பதே வீயூ அமைப்பின் பிரதான நோக்கமாகும்.’

இதேவேளை, தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியானது (வியூ)  அப்ரியல் இளைஞர் வலையமைப்பு, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், ஜனநாயகத்துக்கான இளைஞர் ஒன்றியம் மற்றும் ஜனநாயகத்துக்கான இளம் சட்டத்தரணிகள் ஒன்றியம் ஆகிய நான்கு அமைப்புகளின் கூட்டாக கட்டமைக்கப்பட்டதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.