இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முற்றாக முடக்குங்கள் – தேசிய விடுதலை மக்கள் முண்ணனி வேண்டுகோள்…

“இலங்கையில் அதி தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு பூராகவும் சுமார் இரண்டு வாரங்களுக்காவது முடக்கல் நிலையை ஏற்படுத்தி தொற்றாளர்களை அடையாளம் காண அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சு பொறுப்புடையவர்களும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாட்டு மக்கள் உயிரோடு வாழ்ந்தால் மட்டுமே ஒவ்வொறு குடும்பமும் சந்தோசமாக உழைத்து வாழ முடியும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதுவரை நாட்டில் பல பாகங்கள் முடக்கப்பட்ட நிலையில் கூட தொற்றுப் பரவலைக் குறைக்க முடியவில்லை. மாறாக தொற்றுப் பரவல் அதிகரித்தே காணப்படுகின்றது.

அரசு நாட்டை முடக்கி மக்களைள் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கும் விடயத்தில் கவனம் காட்டுவதில் மந்த நிலையைக் கடைப்பிடிப்பதைக் காணமுடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில் நாட்டை ஒருபோதும் முடக்க இடமளிக்க மாட்டேன் எனக்  கூறியது மிகவும் சிந்திக்க வேண்டிய விடயமே!

இன்று நாட்டின் ஒரு சில பாகம் முடக்கம் செய்து பரவலைக் குறைப்பதே கஷ்டமான நிலையில் முழுமையாக முடக்கத்தை நீக்கி எப்படி இதைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு கேள்விக்குறியே!

கொரோனாவுக்காகக் கிடைத்த நிதி உதவியையும் உலக வங்கியால் வழங்கிய பண உதவியையும் வைத்து நாட்டு மக்களைப் பாதுகாக்க வழிசமைக்க வேண்டும். மக்களின் வாழ்வாதார நிவாரணங்களை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மாறாக நிதியை முடக்கி சமூக முடக்கத்தைத் திறப்பது என்பது கவலைக்குரிய விடயமே!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றாளர்கள் பலத்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அத்துடன் மரணமும் அதிகரித்தே வருகின்றது. இவைகளை அறிந்த தொற்றாளர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்குச் செல்வதற்கு மிகவும் தயங்குகின்றனர்.

அரசு இன்றைய – நாளைய பொருளாதாரத்தைக் கவலையாகக் கொண்டால் எதிர்காலம் முற்றாகப் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

அத்துடன் இப்படி நாளுக்கு நாள் அதிகரிப்பு காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூட வேண்டிய நிலையும் ஏற்படும். நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்படும் சூழ்நிலை தோன்றும். இவைகளில் அரசு அதி விசேட கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.