விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வேண்டிய சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்படும்…

பெரும்போக நெல் சாகுபடிக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

 நேற்று(09) திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் உர இறக்குமதி மற்றும் விநியோகத்தை செயல்திறன் மிக்கதாக்குவது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நீர் மற்றும் உரத்தை விநியோகிப்பதன் ஊடாக குறுகிய காலத்தினுள் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டின் உரத்திற்கான தேவை 708,910 மெட்ரிக் டொன்னாகக் காணப்படுவதுடன், பெரும்போகத்திற்கு தேவையான 214,000 மெட்ரிக் டொன்னில் இதுவரை 51,797 மெட்ரிக் டொன் உரத்தை விவசாயிகள் மத்தியில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எஞ்சிய தொகையை முறையாக விநியோகிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய உரச் செயலகம் மேற்படி கலந்துரையாடலின் போது வெளிப்படுத்தியது.
ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான உர விநியோகத்தில் 10 சதவீதம் அரச நிறுவனங்களினாலும், 90 சதவீதம் தனியார் நிறுவனங்களினாலும் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.

இதன்போது உரம் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் தனியார் நிறுவனங்கள் திரு.பசில் ராஜபக்ஷ அவர்களிடம் விரிவாக கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஆண்டின் சிறு போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு விரைவாக ஒப்புதல் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட தொகையை டிசம்பர் மாதமளவில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினர்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வேண்டிய சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யக்கூடிய சூழலொன்று உருவாக்கப்படும் என்றும் உரத்தின் தரத்தை ஒழுங்குறுத்துவதற்கும், கழிவற்ற உயர் தரத்திலான உரத்தை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஆண்டிற்கு தேவையான 708,910 மெட்ரிக் டொன் மொத்த உரத்தில் சிறு போகத்திற்காக 285,504 மெட்ரிக் டொன் ஒதுக்கப்படுவதுடன், பெரும் போகத்திற்காக 423,406 மெட்ரிக் டொன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.