கடன்களில் இறுகும் எங்கள் எதிர்காலம்!

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தால் எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது என ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாட்டைக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டமானது சகல வகையிலும் கவலையளிக்கக்கூடிய வரவு – செலவுத்  திட்டமாக மாறியுள்ளது. இலங்கையைப் பாரிய கடன் பொறிக்குள் தள்ளும் வரவு – செலவுத் திட்டத்தையே அரசு தயாரித்துள்ளது.

நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிகளிருந்தும், கொரோனா வைரஸ் நிலைமைகளில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிருந்தும் மீளெழும் வகையில் இந்த வரவு – செலவுத் திட்டம் அமையவில்லை. வழமை போன்றே கடன்களைப் பெற்றுக்கொண்டு செலவு செய்யும்  வரவு – செலவுத்திட்டமாகவே இது அமைந்துள்ளது.

மூன்று பில்லியன் சர்வதேச கடன் எடுத்தே இந்த வரவு – செலவு திட்டத்தை நிரப்பியுள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் எமது கடன்களில் ஐந்தாயிரம் பில்லியன் சேர்ந்துள்ளது. ஏற்கனவே இருந்த 13 ட்ரில்லியன் கடன் தொகையுடன் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது. எனவே, எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.