காணிகளை சுவீகரிப்புக்கு எதிராக நிலாவெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி 8 ஆம் கட்டையை சேர்ந்த ரசூல் தோட்டம் எனப்படும் சுமார் 61 ஏக்கர் இதுவரை காலம் மக்கள் பாவனைக்குட்பட்டிருந்த காணிப்பரப்பு தற்போது கட்டாயப்படுத்தப்பட்டு சுற்றுலா துறைக்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில்  நேற்று (22) நிலாவெளி குறித்த காணிப்  பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினரின் வருகையால் பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த பகுதியில் திரண்ட மக்கள் சுற்றுலா சபை அதிகாரிகளுக்கு தங்களது குடியிருப்பு காணி ,விவசாய நிலம் தங்களுக்கே உரித்தானது தொடர்பில் விளக்கமளித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுவரை காலம் வாழ்ந்து வந்த மக்களுக்கு எந்த வித மாற்று வசதிகளோ நட்ட ஈடோ வழங்கப்படாத நிலையில் இதுவரை எந்த அரசியல்வாதிகளோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ உரிய தகுந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் சுற்றுலா துறைக்காக காணிகளை சுவீகரிக்காதே போன்ற  பதாகைகளை ஏந்தியவாறு தங்களது குடியிருப்பு விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறும் கவனயீர்ப்பின் போது தெரிவித்திருந்தனர்.
2015 ல் அரசுடைமையாக்கப்பட்டு சுற்றுலாத் துறைக்கு கையகப்படுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.பரம்பரை பரம்பரையாக பூர்வீகக் காணிகளை இவ்வாறு அரசுடைமையாக்கம் செய்வது தங்களுக்கு கவலையளிப்பதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு சென்ற சுற்றுலா அதிகார சபையினர் வெளியேறியதுடன் பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.