தமிழ் மக்களின் இருப்பை கபளீகரம் செய்யும்மாவடிப்பள்ளி-கல்முனை கார்ப்பட்வீதியை உடனடியாகநிறுத்துங்கள்!

நகரஅபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் இருப்பைக் கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி – கல்முனை கார்ப்பட் வீதியை உடனடியாக நிறுத்தவேண்டும்.இவ்வாறு கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபையின் த.தே.கூ. உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

கல்முனை ஊடகமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் பகிரங்கமாக இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அங்கு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:
கடந்த 25வருடங்களாக கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் ஜீவாதாரமான வயல்காணிகளை கபளீகரம் செய்து இருப்பை இல்லாதொழிக்கும் இவ்வீதியை அமைக்க ஹரீஸ் போன்ற இனவாதிகள் ஒற்றைக்காலில் நின்றனர்.


கல்முனையில் 40ஆயிரம் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றபோதிலும் அவர்களிடம் எதுவுமே கலந்துரையாடாமல் பேசாமல் இச்சதித்திட்டத்தை அரங்கேற்ற முனைந்தனர்.

ஆனால் தமிழுணர்வுள்ள எம்மவரின் எதிர்ப்புக் காரணமாக அவர்கள் அதை கைவிட நேர்ந்தது.
தற்போது இனவாதி அதாவுல்லாஹ் கல்முனையில் கால்ஊன்றும் நோக்கில் வேறொரு போர்வையில் ஹரீஸ் எம்.பியுடன் சேர்ந்து அதேதிட்டத்தை ஜனாதிபதியைப்பிடித்துக்கொண்டு அமுல்படுத்தமுற்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் கார்ப்பட் வீதியமைக்கும் திட்டத்தின் கீழ் 5கிலோமீற்றர் நீளமான இவ்வீதியை போடுவதற்கு வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் தற்போது அளக்கும்வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது.


இந்தக்கணம்வரை இதுபற்றி இங்குவாழும் எந்தத்தமிழருக்கும் தெரியாது. பாருங்கள் எவ்வாறு எம்மீது மேலும் மேலும் சவாரி செய்யப்புறப்படுகிறார். அதாவுல்லாவை எச்சரிக்கின்றோம்.முடிந்தால் இவ்வீதியை போட்டுப்பாருங்கள்.வீதி அபிவிருத்தி செய்யவேண்டுமென்றால் கல்முனை தமிழ்ப்பிரதேசவீதிகளை வந்து பாருங்கள். காலாகாலமாக திட்டமிட்டு பாரபட்சம் காட்டி புறக்கணிக்கப்பட்ட பல வீதிகளுள்ளன. அவற்றைப்புனரமையுங்கள்.
மாவடிப்பள்ளிப்பிரதேசம் காரைதீவுப்பிரதேசசபைக்குள் வருகின்றது. ஆனால் இவ்வீதியமைப்பு தொடர்பாக அந்த காரைதீவு பிரதேச செயலாளருக்கோ பிரதேசசபைத் தவிசாளருக்கோ தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாக கள்ளக்களவாக முன்னெடுக்கிறார்கள்.


இதுவிடயத்தில் கல்முனை மேயரும் தலையிடவேண்டும். இந்த இடத்தில் பகிரங்கமாக அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் இனவாதமற்ற முஸ்லிம் சிங்கள அரசியல்வாதிகளையும் ஒன்றுசேர்ந்து இச்சதியை முறியடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.1லட்சம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு!
ஜனாதிபதியின் 1லட்சம் வேலைவாய்ப்புத்திட்டம்  ஏழைஎளிய மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதனை இனவிகிதாசார அடிப்படையில் வழங்கவேண்டும்.
ஆனால் இங்கு கல்முனையில் இதற்கான நேர்முகப்பரீட்சைக்கு சமுகமளித்தோர் சும்மாயிருக்க வேறுயாருக்கோவெல்லாம் வழங்கப்படுகிறது. ஆளும் அரசியல்பிரமுகர்கள் சிலர் கையூட்டல்கள் பெற்றமைபற்றியும் அறியக்கிடைக்கிறது.

இங்குள்ள முக்கியதகவல். இந்த மாநகரில் ஆக இரண்டு தமிழர்க்கு மட்டுமே இத்தொழில் கிடைத்துள்ளது.
இதேநிலைவரம் எல்லா தமிழர்பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளது. காரைதீவில் இம்முறை கிடைத்த 10தொழிலும் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஒரு தமிழருக்கும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளும் இதனை வெளியில் கூறுகிறார்களில்லை.


இது ஏழைத்தமிழ்மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகவே பார்க்கிறேன். இது ஜனாதிபதிக்குத் தெரியாமலிருக்கலாம். எனவேதான் இங்கு ஊடகங்களிலல் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன். உடனடியாக இதற்கு நீதி வழங்கவேண்டும். என்றார்.வண.சங்கரத்ன தேரர் கூறுகையில்:
கிழக்குமாகாணசபைத் தேர்தல் தாமதமின்றி நடாத்தப்படவேண்டும்.சில இனவாதிகள் இதனைக்குழப்ப முயற்சிக்கின்றனர். தேர்தலை நடாத்தி அந்தந்த பிரதிநிதிகளிடம் அபிவிருத்திவேலைகளை ஒப்படையுங்கள்.
கிழக்கில் பின்தங்கிய தமிழர் பிரதேசங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. தொழில்வாய்ப்பிலும் புறக்கணிப்பு.ஆளுநருக்கு இது தெரியாது.


ஜனாதிபதி அண்மையில் அம்பாறைக்கு வந்தார். ஆனால் எமக்கோ தமிழ்பிரதிநிதிகளுக்கோ எந்த அழைப்பும் விடுக்கவில்லை. இனமதசார்பற்று நாட்டின் தலைவர் நடக்கவேண்டும். கல்முனைக்கு வந்து பாருங்கள். இங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் நிலைமை பற்றி அறியுங்கள்.

கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று நானும் உண்ணாவிரதமிருந்தேன். அண்மையில் கணக்காளர் வந்துபோனார். அதற்குள் இனவாதி தலையிட்டு நிறுத்தியுள்ளனர். நான் அரசஅதிபரிடம் பேசியுள்ளேன். ஜனாதிபதியைச் சந்தித்து இங்குள்ள அத்தனை பிரச்சினைகளையும் விலாவாரியாக எடுத்துரைக்கவுள்ளேன். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.