புல்மோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

(பதுர்தீன் சியானா)

திருகோணமலை-குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நால்வருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட போது  03  பெண்கள் உட்பட ஆணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டதாகவும் மொத்தமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை லிங்கு நகர் பகுதியில் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், கடந்த 23ஆம் திகதி திருகோணமலை டைக்  வீதியில் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் திருகோணமலை  நீதிமன்றில் கடமையாற்றி வருகின்ற ஊழியரொருவரின் தந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 64 வயதுடையவர் எனவும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள்  அதிகமாக ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும், முகக் கவசங்களை தொடர்ந்தும் பாவிக்குமாறும் சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு திருகோணமலை சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.